52 வருட கால வேதனையை முடிவுக்குக் கொண்டுவந்த காங்கோவின் தங்கக் கோல்

அதற்குப் பின்னால் 52 வருடங்களாக அவர்களின் இதயங்களில் இருந்த பெரும் வலியையும் ஏமாற்றத்தையும் துடைத்தெறிந்த ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க கதை ஒளிந்துள்ளது.

பலத்த போர்ச்சுகல் போன்றதொரு அணிக்கு எதிராக இன்று அவர்கள் பெற்ற 1-1 என்ற சமநிலை முடிவை ஏன் ஒரு உண்மையான அதிசயம் என்று கருதுகிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டுமானால், அவர்கள் கடந்து வந்த அந்த இருண்ட காலத்தையும், பயணித்த மிகக் கடினமான பாதையையும் நாம் கண்டிப்பாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

காங்கோ அணி இதற்கு முன்னர் கடைசியாக உலகக் கிண்ணத் தொடருக்குத் தகுதி பெற்றது 1974ஆம் ஆண்டிலாகும். அக்காலத்தில் இந்நாடு ‘சயார்’ (Zaire) என்ற பெயரால் அழைக்கப்பட்டது. சப்-சஹாரன் ஆப்பிரிக்க (Sub-Saharan African) பிராந்தியத்தில் இருந்து உலகக் கிண்ணத்திற்கு வந்த முதல் நாடு என்ற பெரும் பெருமையுடன் அன்று அவர்கள் களமிறங்கினாலும், இறுதியில் அந்தப் பயணம் அவர்களுக்கு ஒரு கொடூரமான கனவாக மாறியது.

அதற்கு முக்கிய காரணம், அந்த நாட்டை ஆட்சி செய்த ‘மொபுட்டு சேசே செகோ’ (Mobutu Sese Seko) என்ற சர்வாதிகார ஆட்சியாளராவார். அவர் வீரர்களுக்கு வழங்குவதாக உறுதியளித்த பணத்தைச் செலுத்த மறுத்தது மட்டுமன்றி, பலத்த பிரேசில் அணிக்கு எதிரான போட்டியில் 3 கோல்களுக்கு மேல் வித்தியாசத்தில் தோல்வியடைந்தால், மீண்டும் நாட்டுக்குள் கால் வைப்பதைப் பற்றி நினைத்துக்கூடப் பார்க்க வேண்டாம் என்று வீரர்களைக் கொடூரமாக மிரட்டினார்.

இந்தக் கடுமையான மன அழுத்தத்திற்கு மத்தியில் விளையாடிய அவர்கள், யுகோஸ்லாவியா அணியிடம் 9-0 என்ற கணக்கில் மிக மோசமான தோல்வியைச் சந்திக்க நேரிட்டது. இது உலகக் கிண்ண வரலாற்றில் ஒரு நாடு சந்தித்த மிக மோசமான தோல்விகளில் ஒன்றாகப் பதிவாகியுள்ளது.

இதன் பின்னர் பிரேசில் அணியுடன் நடைபெற்ற போட்டியில், உலகையே சிரிக்க வைத்த, ஆனால் அதற்குப் பின்னால் பெரும் பயம் ஒளிந்திருந்த ஒரு சம்பவம் நிகழ்ந்தது. பிரேசில் அணி ஒரு இலவச உதை (Free-kick) வாய்ப்பைச் செலுத்தத் தயாராகிக் கொண்டிருந்தபோது, காங்கோவின் தற்காப்பு ஆட்டக்காரரான ‘ம்வேபு இலுங்கா’ (Mwepu Ilunga), திடீரெனத் தனது தற்காப்பு மதிலில் (Wall) இருந்து முன்னோக்கி ஓடிவந்து, பிரேசில் வீரர்கள் பந்தை உதைப்பதற்கு முன்பாகவே அந்தப் பந்தை உதைத்துத் தூர வீசினார்.

அன்று உலகமே இந்த வீரருக்குக் காற்பந்து விதிகள் தெரியாது என்றுதான் நினைத்தது. ஆனால் உண்மை என்னவென்றால், அவர் அந்த நேரத்தில் சர்வாதிகார ஆட்சியாளரின் மிரட்டலால் கடுமையான அச்சத்தில் இருந்தார். எப்படியாவது ஒரு சிவப்பு அட்டையைப் (Red card) பெற்று மைதானத்தை விட்டு வெளியேறி, அந்த கொடூரமான மன அழுத்தத்தில் இருந்து தப்பிக்கவே அவர் அவ்வாறு செய்தார்.

ஆனால், 52 வருடங்களுக்குப் பிறகு இன்றைய நாளில் அந்த இருண்ட வரலாறு முற்றிலுமாக மாறியுள்ளது. போர்ச்சுகலுக்கு எதிரான இன்றைய போட்டியில் யோவான் விஸா (Yoane Wissa) அடித்த அந்த அற்புதம் கோல், வெறும் போட்டியைச் சமன் செய்தது மட்டுமல்ல. அது அவர்களின் உலகக் கிண்ண வரலாற்றில் அவர்கள் பெற்ற முதலாவது அதிகாரப்பூர்வ, செல்லுபடியாகும் கோலாகும்!

அந்தக் கோலின் மூலம் 1974ஆம் ஆண்டிலிருந்து தங்கள் இதயங்களை உலுக்கிக் கொண்டிருந்த அந்த இருண்ட நினைவுகளையும் “சாபத்தையும்” என்றென்றைக்குமாகப் புதைக்க காங்கோ மக்களுக்கு இன்று முடிந்துள்ளது.

இந்தக் கனவுப் பயணம் இவ்வளவு அழகாக அமைந்ததற்கு மற்றுமொரு காரணம், அவர்கள் இம்முறை உலகக் கிண்ணத்திற்குத் தகுதி பெற்ற விதமாகும்.

பொதுவாக இவ்வாறான கதைகளில் ஏதேனும் ஒரு பலமான அணியைத் தோற்கடித்து முன்னேறுவதையே காண முடியும். ஆனால், காங்கோ அணி இங்கு வருவதற்கு ஆப்பிரிக்கக் காற்பந்து அரங்கின் மூன்று மாபெரும் அணிகளைத் தோற்கடிக்க வேண்டியிருந்தது.

அவர்களுக்கு உலகக் கிண்ணத்திற்கு நேரடியாகத் தகுதி பெறும் வாய்ப்பு இருக்கவில்லை. அவர்கள் மிகவும் கடுமையான பிளே-ஆஃப் (Play-off) சுற்றை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. அங்கு, ஐந்து முறை ஆப்பிரிக்கக் கிண்ணத்தை வென்ற கேமரூன் அணியையும், உலகக் கிண்ணத் தொடர்களில் வழக்கமாகக் காணப்படும் பலத்த நைஜீரிய அணியையும் பெனால்டி சூட்-அவுட் (Penalty shoot-out) முறையில் வீழ்த்தி அவர்களால் தொடரிலிருந்து வெளியேற்ற முடிந்தது.

அவர்களின் இறுதித் தடையாக இருந்தது மெக்சிகோவில் ஜமைக்காவுக்கு எதிராக நடைபெற்ற போட்டியாகும். அங்கு கூடுதல் நேரத்திலும் போட்டி 0-0 என சமநிலையில் இருந்தபோது, போட்டியின் 100ஆவது நிமிடத்தில் ஆக்ஸெல் துவான்செபே (Axel Tuanzebe) தலையால் முட்டி அடித்த அசாத்தியமான கோலின் மூலமே அவர்கள் தங்களது உலகக் கிண்ண வாய்ப்பை உறுதி செய்தனர்.

காங்கோ அணியின் இந்தப் போராட்டம் காற்பந்து மைதானத்தோடு மட்டும் நின்றுவிடவில்லை. தொடர் தொடங்குவதற்கு சில வாரங்களுக்கு முன்பு அவர்களின் நாட்டில் ஏற்பட்ட கடுமையான ‘எபோலா’ (Ebola) தொற்று நோய் காரணமாக, சர்வதேச பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

இதனால் அவர்களுக்கு ஆதரவளிக்க அமெரிக்காவுக்கு வரவிருந்த ஆயிரக்கணக்கான காங்கோ ரசிகர்களுக்கு அந்த வாய்ப்பு பறிபோனது. ரசிகர்களின் ஆதரவு குறைவாக இருந்தபோதிலும், வீரர்கள் தங்களது முயற்சியைக் கைவிடவில்லை.

அதேபோல், இந்த அணியை ஒரு “அனாதை அணி” (Orphan Squad) என்றும் அழைக்கிறார்கள். ஏனெனில் நாட்டின் அரசியல் ஸ்திரமற்ற தன்மை மற்றும் பிரச்சினைகள் காரணமாக, இங்குள்ள யோவான் விஸா மற்றும் துவான்செபே போன்ற பல வீரர்கள் இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற ஐரோப்பிய நாடுகளிலேயே வளர்ந்தனர்.

அவர்கள் நினைத்திருந்தால் அந்த நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடியிருக்கலாம். ஆனால் அவர்கள் தங்கள் தாய்நாட்டின் உரிமைக்காகவும் பாரம்பரியத்திற்காகவும் மீண்டும் வந்து காங்கோ நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்த முடிவு செய்தனர்.

சிதறிப் போயிருந்த ஒரு நாட்டை, ஒரே கொடியின் கீழ் ஒன்றிணைக்க இந்த வீரர்களால் முடிந்தது.இன்று பலத்த போர்ச்சுகலுக்கு எதிராக அவர்கள் பெற்ற இந்த 1-1 என்ற சமநிலை, வெறும் ஒரு புள்ளியைப் பெற்றது மட்டுமல்ல. அது மனிதநேயம், அர்ப்பணிப்பு மற்றும் ஒருபோதும் வீழ்த்த முடியாத மனித ஆற்றலின் உண்மையான வெற்றியாகும்.

இதுபோன்ற அழகான காற்பந்து கதைகள்தான் உலகக் கிண்ணத்தை மேலும் அழகாக்குகின்றன.

Leave a Reply