இந்தியாவுக்குள் நுழையும் ஆப்கான் போதைப் பொருட்கள்

உலக அளவில் 80 முதல் 90 சதவீத ஹெரோயின் உற்பத்தி ஆப்கானிஸ்தானில் நடப்பதுடன், தலிபான்களின் கட்டுப்பாட்டுக்குள் ஆப்கான் வந்த பின்னர், ஹெரோயின் உற்பத்தி அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
குஜராத் மாநிலம் முந்த்ரா துறைமுகத்தில் ஆப்கானிஸ்தானிலிருந்து கடத்தி வரப்பட்ட 3 தொன் ஹெரோயின் போதைப் பொருட்கள் இருப்பதாக இரகசியத் தகவல் கிடைத்ததையடுத்து நடத்திய விசாரணையில் இருவர் கைது செய்யப்பட்டதுடன, இரு கொள்கலன்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

ஒரு கொள்கலனில் 2 தொன் ஹெராயின் போதைப் பொருளும், மற்றொரு கொள்கலனில் 1 தொன் ஹெரோயினும் கண்டுபிடிக்கப்பட்டன.

இந்தப் போதைப் பொருள் கடத்தல் தொடர்பாக அகமதாபாத், டெல்லி, சென்னை, காந்திதாம், மாண்டவி உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டுள்ளதுடன், இந்த இரு கொள்கலன்களிலும் உள்ள ஹெரோயின் போதைப் பொருளின் சர்வதேச சந்தை மதிப்பு ரூ.19,900 கோடி என்று தெரிவிக்கப்படுகிறது.

இந்தக் கடத்தலில் ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு தொடர்பு இருக்கக்கூடும் என்ற சந்தேகம் எழுந்துள்ள நிலையில் இதுதொடர்பில் விசாரணை நடந்துவருகிறது.