இந்திய இழுவைப்படகு மீனவர்களின் அத்துமீறலைக் கண்டித்து போராட்டம்

யாழ். மாவட்டக் கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனத்தில், இன்று (23) நடைபெற்ற விசேட ஊடக சந்திப்பிலேயே, அந்த சம்மேளனத்தினரால் இந்த அழைப்பு விடுக்கப்பட்டது.

இந்த ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த சம்மேளனத்தின் தலைவர் அன்னராசா, தாம் இராமேஸ்வரம் கடற்றொழிலாளர்களின் போராட்டத்தை வன்மையாக கண்டிப்பதாகத் தெரிவித்தார்.

அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்களை கைது செய்ய வேண்டும் எனத் தெரிவித்த அவர், அவர்களை நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்யக்கூடாது எனவும் கூறினார்.

தங்களுடைய பகுதிக்கு வந்து தொழில் செய்யும் இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்யும் போது, தங்களுக்கு எதிராகவும் கடற்படையினருக்கு எதிராகவும் விஷமத்தனமான கருத்துகள் சில தமிழக மீனவர்களால் முன்வைக்கப்படுகின்றது எனவும், அவர் தெரிவித்தார்.

இலங்கை – இந்திய மீனவர்கள் பேச்சுவார்த்தை என தமிழ்நாட்டு மீனவர்கள் கூறுகின்றார்கள் எனத் தெரிவித்த அவர், தம்மைப் பொறுத்தவரை மீனவர் சமூகமாகிய தாங்கள் பல சுற்று வார்த்தைகளை நடத்தியபோதும் அதில் எந்த பலனும் கிடைக்கவில்லை எனவும் கூறினார்.
தாங்கள் ஏமாற்றப்படுகின்ற சமூகமாகவே காணப்படுவதாகவும், அவர் கூறினார்.

நாளைய தினம் (24), யாழ். மாவட்ட மீனவர்கள் கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனத்தில் இருந்து பேரணியாக புறப்பட்டு யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தை முற்றுகையிடுவதற்கு தாம் தயாராகவுள்ளதாகவும், அவர் கூறினார்.

‘இந்தியாவில் எம்மை அவமதித்தும் உண்மைக்குப் புறம்பான செய்திகளையும் தமிழ்நாட்டு மீனவர்கள் செய்து கொண்டிருக்கின்றார்கள். அந்த பொய்யான முகத்தை இந்திய மத்திய மாநில அரசுகளுக்கு வெளிச்சம் போட்டு காட்டுவதற்காகவும் நாளை காலை 9 மணிமுதல் தீர்வு கிடைக்கும் வரை யாழ். மாவட்ட செயலகம் முன் முற்றுகைப் போராட்டத்தை நடாத்துவதற்கு நாங்கள் தீர்மானித்திருக்கிறோம்.

‘இந்தப் போராட்டத்தில் அனைத்து கடற்றொழிலாளர் சங்கங்கள், அரசியல்கட்சிகள், சமூக செயற்பாட்டாளர்கள் கலந்துகொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுக்கின்றோம்.

‘இந்த போராட்டத்தில் நாம் எந்த மகஜரையும் கையளிக்கப் போவதில்லை. இந்த போராட்டம் இந்தியாவுக்கு எதிரானதோ தமிழ்நாட்டுக்கு எதிரானதோ எனக் கூறி எங்கள் போராட்டத்தையும் எங்களையும் கொச்சைப்படுத்த வேண்டாம்’ என்றார்.