இலங்கை: கொரனா செய்திகள்

மேல் மாகாணம் மற்றும் வடமேல் மாகாணத்திலுள்ள சகல பாடசாலைகள் மற்றும் பாலர் பாடசாலைகள் அனைத்தும் இந்த மாதம் 30ஆம் திகதி வரை தற்காலிகமாக மூடப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அத்துடன்,அறநெறி பாடசலைகளும் 30ஆம் திகதி வரை மூடப்படுமென கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

புறக்கோட்டை பொலிஸ் நிலையத்தின் உப பொலிஸ் பரிசோதகர் உள்ளிட்ட 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

காய்ச்சல் காரணமாக  நாரஹேன்பிட்டி பொலிஸ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட உப பொலிஸ் பரிசோதகர் மற்றும் கான்ஸ்டபிள் ஒருவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் பின்னர், இவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதற்கமைய, குறித்த இருவருடனும் தொடர்பிலிருந்த 11 பேர் தனிமைப்படுத்தப்பட்டு, அவர்களுக்கு  என்டிஜன் பரிசோதனை செய்யப்பட்டதையடுத்து, நால்வருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.நாட்டில் மிகவேகமாக பரவிகொண்டுவரும் புது கொரோனாவே, பொலிஸாருக்கும் தொற்றியிருக்கலாமென சந்தேகம் எழுந்துள்ளது.

கம்பஹா, களுத்துறை மற்றும் திருகோணமலை ஆகிய பிரதேசங்களின் 8  கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் இன்று இரவு 8 மணியிலிருந்து முடக்கப்படவுள்ளதென இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, கம்பஹா மாவட்டத்தின் கொட்டதெனிய பொலிஸ் பிரிவின் பொல்ஹேன, ஹுரலு கெதர மற்றும் கலுஅக்கல ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும் மினுவாங்கொட பொலிஸ் பிரிவின் அஸ்வென்னவத்த கிழக்கு பிரிவும் களுத்துறை மாவட்டத்தின் மீகஹாதென்ன பொலிஸ் பிரிவு, மிரிஸ்வத்த, பெலவத்த கிழக்கு, பெலவத்த வடக்கு ஆகிய கிராம உததியோகத்தர் பிரிவுகளும் திருகோணமலை மாவட்டத்தின் திருகோணமலை பொலிஸ் பிரிவின் பூம்புகார் கிராம உத்தியோகத்தர் பிரிவு மற்றும் தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் என்பன தனிமைப்படுத்தல் பிரிவுகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

கொரோனா தொற்று அதிகரித்துச் செல்லும் நிலையில், அவசர சிகிச்சைப் பிரிவுகளில் இடப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதென, அரச மருந்தாக்கட் கூட்டுதாபனத்தின் தலைவர் விசேட வைத்தியர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.

எனவே ஆரம்பத்திலேயே கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவது அவசியம் என்றார்.

இதற்காக தம்மால் முடிந்த சுயபரிசோதனைகளை செய்துகொண்டு, ஆரம்பத்திலேயே  வைத்தியசாலைக்குச் சென்றால், கொரோனா தொற்றை விரைவில் குணப்படுத்த முடியும் என்றார்.

 முன்பு சிரமமின்றி படிக்கட்டுகளில் ஏறி, தற்போது சோர்வை எதிர்நோக்கினால்

ஒரே மூச்சில் 1- 10 வரை எண்ண முடியாவிட்டால்

அல்லது  சில சொற்களை பேசும் போது சோர்வை உணர்தல் என்பன உங்களுக்கான சுயபரிசோதனை என தெரிவித்துள்ள அவர், தவிர இந்த பரிசோதனைகளுடன் கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் காணப்பட்டாலும் விரைவாக வைத்திய ஆலோசனைப் பெறுவது சிறந்தது என்றார்.

கொரோனா தொற்றுக்குள்ளான 892 பேர், இன்று (26) இனங்காணப்பட்டனர்