இலங்கை: கொரனா செய்திகள்

வைத்தியசாலைகளில், ஒட்சிசன் தேவையுள்ள கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதாக ஔடத உற்பத்திகள், வழங்குகைகள் மற்றும் ஒழுங்குறுத்துகை இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமான தெரிவித்தார்.

கொழும்பு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இந்த நிலைமையை அவதானிக்கக்கூடியதாக உள்ளது என்றும் அவர் கூறினார்.

கொரோனா வைரஸ் திரிபான டெல்டா பரவிய பின்னர் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது என்றும் மிகுந்த அவதானம் செலுத்த வேண்டிய ஒன்றாகும் என்றும் குறிப்பிட்டார்.  

கடந்த காலத்தில் 100 நோயாளிகளில் ஐந்து பேர் ஒட்சிசனைச் சார்ந்திருந்தனர் எனக் கண்டறியப்பட்டதாகவும் இப்போது இதுபோன்ற பத்துக்கும் மேற்பட்ட நோயாளிகள் உள்ளனர் என்றும் தெரிவித்தார்.

இதேவேளை, தடுப்பூசி செலுத்தும் திட்டம் நாடு முழுவதும் துரிதப்படுத்தப்பட்டுள்ளது, மேலும் 30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் அடுத்த மாத இறுதிக்குள் தடுப்பூசி போடப்படும் என்று கூறிய அவர், மக்களை மரணத்திலிருந்து காப்பாற்றுவதே தடுப்பூசி செலுத்துவதன் முக்கிய நோக்கம் என்றும் குறிப்பிட்டார். 

வடக்கு – கிழக்கு மாகாணங்களுக்காக 16 இலட்சம் கொரோனா தடுப்பூசிகள். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கையளிக்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதி மாளிகையில், இன்று (27) நடைபெற்ற நிகழ்வில், இலங்கைக்கான சீனத் தூதுவர் கியூய் ஷென்ஙொங், இந்த தடுப்பூசிகளை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கையளித்தார்.

வடக்கு – கிழக்கைச் சேர்ந்த 30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசிகளை வழங்கும் நோக்கோடு,  சுமார் 16 இலட்சம் தடுப்பூசிகளை சீன அரசாங்கம் இலங்கைக்கு வழங்கியுள்ளது.

குறித்த தடுப்பூசிகளை இலங்கைக்கான சீனத் தூதுவரால், ஜனாதிபதியிடம் கையளிக்கும் நிகழ்வு, இன்று, ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது.

இதன்போது, வடக்கு – கிழக்கு மாகாணங்களுக்கான தடுப்பூசிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் வழங்கி வைக்கப்பட்டன.

இந்தத் தடுப்பூசிகள், சுகாதார சேவைகள் திணைக்களத்தின் பரிந்துரைகளுக்கு அமைய, வடக்கு கிழக்கு மாகாணங்களின் அனைத்து மாவட்டங்களுக்கும் பகிர்ந்தளிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த நிகழ்வில், சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி மற்றும் சீனத் தூதரக அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.