இலங்கை: கொரோனா தகவல்

மட்டக்களப்பு மற்றும் மாத்தளை மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த சில பகுதிகள் இன்று(09) காலை 6.00 மணியுடன் விடுவிக்கப்பட்டுள்ளன. மட்டக்களப்பு மாவட்டதின் காத்தான்குடி தெற்கு, வடக்கு, மேற்கு, மத்திய கிராம அலுவலர் பிரிவுகளும் மாத்தளை மாவட்டத்தின் இஸ்மான் மாவத்தை, மீதெனிய கிராம அலுவலர் பிரிவு என்பன இவ்வாறு தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற தவறிய குற்றச்சாட்டில், 38 நிறுவனங்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 407 நிறுவனங்கள் நேற்றைய தினம் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதில், 38 நிறுவனங்கள்  சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்ற தவறியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

சுகாதார விதிமுறைகளை பின்பற்ற தவறிய 1,300 அரச மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு எதிராக இதுவரை வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக, பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

திருகோணமலை மாவட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் 60 பேருக்கு, பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.சையொழிபவன் தலைமையில், திருகோணமலை நகர பொது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் இன்று (10) கொவிட்19 தடுப்பூசி செலுத்தப்பட்டது. புல்மோட்டை, குச்சவெளி, நிலாவெளி, உப்புவெளி, பதவிசிறிபுர மற்றும் தலைமையகப் பொலிஸ் நிலையங்களில் கடைமையாற்றும் பொலிஸாருக்கே இவ்வாறு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கு இடமளிப்போம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, பாராளுமன்றத்தில் தெரிவித்தார் பாராளுமன்றத்தில் பிரதமரிடம் கேளுங்கள் கேள்வி நேரத்தில், ​ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார்,

“நீரின் ஊடாக கொரோனா வைரஸ் தொற்றுவதற்கு வாய்ப்பு இல்லையென சுகாதார இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்ணான்டோபுள்ளே, பாராளுமன்றத்தில் நேற்று (09) தெரிவித்தார். அப்படியாயின், மரணமடையும் முஸ்லிம்களை புதைப்பதற்கு இடைமளிப்பீர்களா” என வினவினார்.

அதற்கு பதிலளித்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, “ புதைப்பதற்கு இடமளிப்போம்” என்றார்.