உயிர் காக்கும் விமானப் பயணம்

 

விமான விபத்தின் போது பயணிகள் பாதுகாப்புடன் தப்பிக்கும் வகையில் புதிய தொழில்நுட்ப விமானத்தை உக்ரைன் நாட்டு பொறியாளர் வடிவமைத்துள்ளார். இவரது இந்த புதிய முயற்சியால் விமான விபத்தால் உயிரிழப்புகள் பெருமளவு தவிர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. என்னதான் நவீன தொழில்நுட்பங்களுடன் விமானம் தயாரிக்கப்பட்டாலும், அவை தொழில்நுட்ப கோளாறு காரணமாக நொறுங்கி விழுவது, மலையில் மோதி விபத்திற்குள்ளாவது, நடுவானில் எஞ்சின் கோளாறு ஏற்பட்டு தீப்பிடித்து எரிவது ஆகிய எதிர்பாராத விபத்துக்கள் ஏற்படுவது அன்மைகாலமாக சகஜமாகி வருகிறது.இது உலக நாடுகளிடையே அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில் உக்ரைன் நாட்டின் தலைநகர் கிவிவ் நகரில் ஆன்டனோவ் என்ற இடத்தில் உள்ள விமான தயாரிப்பு ஆலையில் பொறியாளராக பணியாற்றி வருகிறார் விளாடிமிர் டாடாரென்கோ என்ற பொறியாளர். அன்மைகாலமாக நடந்து வரும் விமான விபத்துக்கள், உயிர்பலிகள் இவரை மிகவும் வருத்தமடைய வைத்தது, விலைமதிப்பில்லாத உயிர்களை காப்பாற்ற புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய விமானத்தை வடிவமைக்க முடிவு செய்தார், கடந்த மூன்று ஆண்டுகளாக இவர் மேற்கொண்ட தீவிர முயற்சி மேற்கொண்டார்.
இதன்படி எதிர்பாராத விபத்தில் விமான சிக்கும் போது அதில் தப்பிக்கும் வகையில் பயணிகள் அமரும் கேபின் மட்டும் தனியாக பொருத்தும் முறையை வடிவமைத்துள்ளார். இவர் வடிவமைத்துள்ள திட்டம் கிராபிக்ஸ் மூலம் நேற்று டெமோ செய்து காண்பிக்கப்பட்டது. சமூகவலை தளங்களில் வெளியாகி வைரலாக பரவியுள்ளது.

கன்டெய்னர் போன்ற கேபின்

அதில், விமானத்தில் பயணிகள் அமரும் கேபின் பகுதி மட்டும் கண்டெய்னர் போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. இவை தனியாக விமானத்தில் பொருத்தப்படுகிறது. விமான புறப்பட்ட பின்னரோ, அல்லது நடுவானில் பறந்து கொண்டிருக்கும் போது என்ஜின் கோளாறு ஏற்பட்டு தீப்பிடித்தலோ, ஏதேனும் அசம்பாவித சம்பவங்கள் நடந்தாலோ, அடுத்த நிமிடமே, பயணிகள் அமரும் கேபின், விமானத்தில் இருந்து தனியாக பிரிந்து கீழே விடுகிறது, அப்படி விழுந்தவுடன் கேபின் மேல் பொருத்தப்பட்ட இரண்டு பெரிய பாராசூட்கள் விரிவடைந்து கேபினை தரையிறக்கும், தரையிறங்கியுடன் அதிலிருந்து பயணிகள் பத்திரமாக வெளியேறும் வகையில் இரண்டு பக்கமும் வழி ஏற்படுத்துள்ளது,

மிதக்கும்
ஒரு வேளை கேபின் கடலில் விழுந்தாலும், அது மிதக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த புதிய தொழில்நுட்ப விமானம் இயக்கப்படும் செய்முறை வெளியிடப்பட்டது. இந்த புதிய வடிவமைப்பு முயற்சியால் 90 சதவீதம் உயிர் பலி நிகழ்வை தவிர்க்கலாம் என கூறப்படுகிறது
இந்த முயற்சி எந்தளவிற்கு சாத்தியம் எனவும், விமானம் தயாரிக்க எவ்வளவு செலவகும் என்பது குறித்த கேள்வி எழுந்துள்ளது. எனினும் இத்திட்டம் நடைமுறைக்கு வந்தால் பாதுகாப்பான விமான பயணத்திற்கு உத்தரவாதம் உண்டு என வல்லுனர்கள் சான்றளித்துள்ளனர்

காப்புரிமை
நேற்று வெளியிடப்பட்ட இந்த புதிய தொழில்நுட்ப விமான செயல்முறை தயாரி்ப்பிற்கு, உக்ரைன் பொறியாளர் விளாடிமிர் டாடாரென்கோ காப்புரிமை பெற்றார்