“என்ட பிள்ளையை காட்டுங்கள்… அவன் மடியில் நான் சாகவேணும்…”

புற்றுநோயால் பீடிக்கப்பட்ட தாய் கதறி அழுகை

“என்ட பிள்ளையை காட்டுங்கள். நான் அவனின் மடியில் சாகவேணும்” என புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தாயார் காணாமல் போன ஆணைக்குழுவின் முன்னால் கதறி அழுதார். காணாமல் போனோரை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் மூன்று நாள் அமர்வு பருத்தித்துறை பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

அங்கு ஆணைக்குழு முன்பாக தாயார் ஒருவர் சாட்சியமளித்தார். பருத்தித்துறை உடுப்பிட்டி பகுதியைச் சேர்ந்த புஸ்பநாதன் சுரேஸ், சுரேஸ் சுதாமதி (மருமகள்), விதுசகன் (பேரப்பிள்ளை) அபிராமி (பேரப்பிள்ளை) ஆகிய நான்கு பேரில் மருமகள் மற்றும் இரு பேரப்பிள்ளைகளும் வட்டுவாள் பகுதியில் சித்திரை 20 ஆம் திகதி 2009 ஆம் ஆண்டு யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, இராணுவ கட்டுப்பாட்டிற்குள் சென்றார்கள்.

புஸ்பநாதன் சுரேஸ் (மகன்) மே மாதம் 16 ஆம் திகதி நந்திக்கடலில் காணாமல் போய்விட்டார்.

நான்கு பேரையும் இலங்கையில் உள்ள அனைத்து இராணுவ முகாம்களிலும் தேடி விட்டேன். இனி தேட இடமில்லை. அதனால் உங்களை நாடி வந்திருக்கின்றேன்.

“நீங்கள் தான் என்ட பிள்ளையை தேடி தர வேண்டும்” என்ட பிள்ளையை தேடி தாங்க….. என மன குழப்பத்துடன் தாயார் கதறி அழுத்தார்.

பூஸா முகாம் மற்றும் வெலிக்கடை சிறைச்சாலைகள் என எல்லா சிறைச்சாலைகளிலும் தேடி விட்டோம். என்ட பிள்ளையை தேடி களைத்துப் போய் எனக்கு வருத்தம் பிடித்து விட்டது.

என்ட பி்ள்ளையை காட்ட வேண்டும். என்னோட பிள்ளையின் மடியில் நான் சாக வேணும். நான் செத்துப் போய் விடுவேன். நான் உயிருடன் இருக்கப் போவது கொஞ்ச நாள் தான். விசாரணைக்கு எடுக்கின்றோம் விசாரணைக் குழு வீட்டிற்கு வந்தால், உங்கட பிரச்சினைகளை சொல்லுங்கள். அவர்கள் உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என்றும் ஆணைக்குழுவினர் தெரிவித்தனர்.