ஏறாவூர் இரட்டைப்படுகொலை: மேலும் நால்வர் கைது

ஏறாவூரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இடம்பெற்ற படுகொலையுடன் சம்பந்தப்பட்டதாக கூறப்படும் நால்வர், சற்று முன்னர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டவர்களில் ஏறாவூரைச் சேர்ந்த மூவரும் ஓட்டமாவடி பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரும் அடங்குகின்றனர்.

பணம், நகைகள் கொள்ளையிட வந்தவேளையில், ஆட்கள் அடையாளம் கண்டுகொண்டமையால் அவர்களை கொலைசெய்ததாக விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.

கொலையாளிகளைக் நேரில் பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில் பொதுமக்கள் பொலிஸ் நிலையத்தைச் சூழ்ந்து கொண்டனர்.

எனினும், பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியும், சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகருமான சிந்தக பீரிஸ் மற்றும் மாகாண சபை உறுப்பினர் ஆகியோர் பொலிஸ் நிலையத்துக்கு முன்பாக பிரசன்னமாகிய பொதுமக்களிடம் பொலிஸாரின் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கும் வண்ணம் அமைதி காக்குமாறு கேட்டுக் கொண்டனர். அதற்கமைய பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

கடந்த ஒரு வார காலமாக தொடர்ச்சியாக இடம்பெற்றுவந்த தீவிர விசாரணைகளையடுத்து, சற்று முன்னர் ஏறாவூரின் நகர மத்தியில் மறைந்திருந்த கொலைச் சூத்திரதாரிகள் நால்வர் சாதுர்யமாக மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளனர்.

கொலை செய்யப்பட்ட பெண்ணின் கணவனின் சகோதரன் ஏற்கெனவே கைது செய்யப்பட்டு 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பு – ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏறாவூர் நகர் முகாந்திரம் வீதி முதலாவது ஒழுங்கையில் உள்ள வீட்டில் ஒன்றாக வசித்து வந்த நூர்முஹம்மது சித்தி உசைரா (வயது 56) மற்றும் அவரது மகளான ஜெனீரா பானு மாஹிர் (வயது 32) ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2 மணியளவில் மர்மமான முறையில் பொல்லால் தாக்கப்பட்ட நிலையிலும் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட நிலையிலும் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.

எனினும், சந்தேபர்களை கைதுசெய்து பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துவந்தபோது, அங்கு பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டிருந்தது. இதனையடுத்து, பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியும், சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகருமான சிந்தக பீரிஸ் மற்றும் மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.எம். சுபைர் ஆகியோர் பொலிஸ் நிலையத்துக்கு முன்பாக பிரசன்னமாகியதுடன் பொலிஸாரின் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கும் வண்ணம் அமைதி காக்குமாறு பொதுமக்களை கேட்டுக் கொண்டனர்.