ஐங்கரநேசன், குருகுலராஜாவின் இடங்கள் அனந்தி, சர்வேஸ்வரனுக்கு

வடமாகாண விவசாய அமைச்சர் மற்றும் கல்வி அமைச்சர் ஆகியோர் இராஜினாமா செய்திருக்கும் நிலையில், புதிய அமைச்சர்கள் தெரிவு செய்யப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. வடமாகாண அமைச்சர்கள் மீது ஆளுங்கட்சி உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்ட முறைகேட்டுக் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால், விசாரணைக் குழு ஒன்று நியமிக்கப்பட்டு, விசாரணைகள் நடத்தப்பட்டன. இந்த விசாரணைக் குழுவின் இறுதி அறிக்கையின் பிரகாரம், மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் மற்றும் கல்வி அமைச்சர் த.குருகுலராஜா ஆகியோர், தமது பதவிகளை இராஜினாமா செய்திருந்தனர்.

இந்நிலையில், புதிய அமைச்சர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் நாளை காலை 10 மணிக்கு, வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்யவுள்ளதாகவும், உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, மாகாணக் கல்வி அமைச்சராக ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பின் உறுப்பினர் கந்தையா சர்வேஸ்வரன் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் மாகாண பெண்கள் விவகாரம் மற்றும் புனர்வாழ்வு அமைச்சராக தமிழரசுக் கட்சியின் மாகாணசபை உறுப்பினர் திருமதி அனந்தி சசிதரன் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அறியமுடிகின்றது.

இதேவேளை, முன்னாள் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசனிடம் இருந்த விவசாயம், கால்நடை அபிவிருத்தி மற்றும் கூட்டுறவு ஆகிய அமைச்சு பொறுப்புகளை முதலமைச்சர் தானே பொறுப்பேற்று தன்னிடமிருந்த பெண்கள் விவகாரம் மற்றும் புனர்வாழ்வு உள்ளிட்ட சில துறைகளை அனந்தி சசிதரனிடம் வழங்கி, புதிய அமைச்சுத் துறை ஒன்றை உருவாக்கவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.