மயிலிட்டி துறைமுகம் 27 வருடங்களின் பின் விடுவிப்பு

வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திலுள்ள பொதுமக்களின் காணிகளில் சிலவற்றை, மக்களின் மீள்குடியேற்றத்துக்காக விடுவிக்க, படைத்தரப்பு இணங்கியுள்ளது. இது தொடர்பில், பலாலி ஊடகப்பிரிவு அனுப்பியுள்ள செய்திக் குறிப்பில், ‘தையிட்டி வடக்கு ஜே. 249 கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட 54 ஏக்கர் காணியை, மக்களின் பாவனைக்காக, எதிர்வரும் ஜூலை மாதம் 3ஆம் திகதி விடுவிப்பதற்கு, படைதரப்பு நடவடிக்கை எடுத்துள்ளது’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம், நீண்ட காலமாக விடுவிக்கப்படாமல் இழுத்தடிப்புச் செய்யப்பட்டு வந்த மயிலிட்டி துறைமுகம், மீண்டும் 27 வருடங்களுக்கு பின்னர், மீனவர்களின் வாழ்வாதரத்துக்காக விடுவிக்கப்படுகின்றது. இதன் முதற்கட்டமாக, குறித்த பகுதியில் அமைக்கப்பட்டுள்ள உயர் பாதுகாப்பு வேலிகளை பின் நகர்த்தும் நடவடிக்கையில் படையினர் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.