‘கூட்டமைப்பை ஏமாற்றுவது போல மக்களை ஏமாற்ற முடியாது’ – கருணா

 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை ஏமாற்றுவதைப்போல் நல்லாட்சி அரசாங்கத்தினால் இந்நாட்டு மக்களை ஏமாற்ற முடியாது. நாட்டில் இனிமேல்தான் நல்லாட்சி ஏற்படப்போகின்றது என மீள் குடியேற்றத்துக்கான முன்னாள் பிரதியமைச்சரும் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விநாயகமூர்த்தி முரளீதரன் (கருணா அம்மான்) தெரிவித்தார். வடக்கு மற்றும் கிழக்கு உட்பட நாட்டின் பல பாகங்களிலும் பட்டதாரிகள் உட்பட பல்வேறு தரப்பினர் மேற்கொண்டு வரும் பல்வேறு போராட்டங்கள் தொடர்பில் அவர் கருத்து வெளியிட்டார்.

இது தொடர்பாக நேற்றுக் கருத்து வெளியிட்ட அவர் மேலும் கூறியதாவது, “புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கி நாட்டில் வேலையற்றிருக்கும் இளைஞர் மற்றும் யுவதிகளுக்கு வேலைவாய்ப்பளித்து நாட்டை வளப்படுத்துவதற்கு அரசாங்கத்திடம் உறுதியான திட்டங்கள் எதுவும் இல்லை.

“அதிகாரம் படைத்தவர்களென கூறிக்கெண்டிருப்பவர்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பது வேதனைக்குரியது.

“நாட்டில் எவ்வளவோ திணைக்களங்கள் அரச கூட்டுத்தாபனங்கள் உள்ளன, பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனங்களை மட்டும்தான் வழங்க வேண்டும் என்றில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்துக்கு ஆதரவாக கைதட்டிக்கொண்டு எதிர்க்கட்சியாகவும் இருந்து கொண்டு 40 நாட்களாக போராடிவரும் பட்டதாரிகளின் போராட்டத்தை கவனத்திலே எடுக்கவில்லை. இது வெறுக்கத்தக்க வேதனைக்குரிய விடயமாகும்.

“நாட்டில் புதிய வேலைகளை உருவாக்க வேண்டிய கடப்பாடு அரசாங்கத்துக்கு உள்ளது. மிக விரைவாக அரசாங்கம் இதற்கு ஒரு தீர்வைப் பெற்றுக் கொடுக்க வேண்டும். “வாழைச்சேனை காகித தொழிற்சாலை தூர்ந்து போய்கொண்டிருக்கின்றது அதை மீளக் கட்டியெழுப்பினாலே பல நூற்றுக் கணக்கானோருக்கு வேலைவாய்ப்பை வழங்கலாம்” என்றார்.