‘கொடுத்த வாக்குறுதியை, ஜனாதிபதி மறந்தாலும் நாங்கள் கைவிடோம்’

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொங்கல் விழா, வாகரையில் நேற்று (02) நடைபெற்றபோது, அதில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், ஒரு தடவை மட்டும்தான் ஜனாதிபதியாக இருப்பேன் என்று வாக்குறுதி கொடுத்த ஜனாதிபதி, இன்றைக்கு இரண்டாம் தரமாகவும் ஜனாதிபதியாவதைக் கனவாகக் கொண்டு செயற்படுகின்ற காரணத்தாலே, அவரது போக்கு மாறியிருப்பதாகத் தெரிவித்தார்.

அவரை ஜனாதிபதியாக்குகின்ற போது, எமது இனப் பிரச்சினைக்கான தீர்வை எழுத்திலே கொடுக்கத் தயாராக இருந்தார் என்றும் அதற்குத் தானே சாட்சியெனவும் தெரிவித்த சுமந்திரன் எம்.பி, கொடுத்த வாக்குறுதிகளைத் தவறாமல் நிறைவேற்ற வேண்டிய தார்மிகப் பொறுப்பு இன்னமும் ஜனாதிபதியிடம் இருப்பதாகத் தெரிவித்தார்.

தெற்கில் இருக்கின்றவர்களுக்கு “சமஷ்டி” என்றால் பயம் ஏற்படுவதாகவும் வடக்கில் இருப்பவர்களுக்கு “ஒற்றையாட்சி” என்று சொன்னால் பீதி ஏற்படுவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார் என்றும், நாட்டு மக்கள் பார்த்துப் பயப்படுகின்ற ஒரு விடயமாக அரசமைப்பு இருக்கக் கூடாதென அவர் தெரிவித்திருந்தார் என்றும் சுமந்திரன் எம்.பி தெரிவித்தார்.

எனினும், ஜனாதிபதி, அரசமைப்பை மீறியிருப்பதாகவும் இது ஜனநாயகத்துக்கு விரோதமானதெனவும் அவர் தெரிவித்தார்.

மேலும், ஒருவர் தவறு செய்கிறார் என்பதற்காக, நாங்கள் எமது கொள்கையையோ, முயற்சியையோ கைவிடப் போவதில்லையெனவும் அதில் நாம் திடமாக இருப்போமெனவும் தெரிவித்த சுமந்திரன் எம்.பி, இந்நாட்டிலே, ஓர் அரசமைப்பு, எமது மக்கள் ஏற்றுக்கொள்கின்ற அரசமைப்பாக இருக்க வேண்டுமாக இருந்தால், புதியதோர் அரசமைப்பு உருவாக்கப்பட வேண்டுமென்றார்.