சிறுமியை மூர்க்கத்தனமாகத் தாக்கிய பெண் கைது

யாழ்ப்பாணம், நீர்வேலிப் பகுதியில், 6 வயதுடைய சிறுமியைத் தாக்கிய சம்பவம் தொடர்பில், அச் சிறுமியின் வளர்ப்புத் தாய், கோப்பாய் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். நீர்வேலிப் பகுதியிலுள்ள தோட்டக் காணியில் பெண்ணொருவர், குறித்த சிறுமியை, கத்தியினால் மிகமோசமாகத் தாக்கும் காட்சி அடங்கிய வீடியோ, இன்று வியாழக்கிழமை (22) காலை, பேஸ்புக் சமூக வலைத்தளத்தில் பதிவேற்றப்பட்டது. இவ்வீடியோ பதிவேற்றப்பட்டு, சில மணித்தியாலங்களிலேயே, சிறுமியைத் தாக்கிய தாய், இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அது தொடர்பில் கோப்பாய் பிரதேச செயலக சிறுவர் நன்னடத்தை பிரிவினருக்கும் கோப்பாய் பொலிஸாருக்கும் அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சிறுவர் நன்னடத்தை பிரிவு அதிகாரி கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததன் பிரகாரம், தாக்குதல் மேற்கொண்ட தாயார் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

தாக்குதலுக்கு இலக்கான சிறுமியின் தாய் உயிரிழந்தமையால், தந்தை வேறு திருமணம் முடித்துள்ளார். அவ்வாறு இரண்டாம் தரமாக மணமுடித்த பெண்ணே, சிறுமியை மிக மூர்க்கதனமாக தாக்கியுள்ளதாக தெரியவருகின்றது. தற்போது தாக்குதலுக்கு இலக்கான சிறுமி மற்றும் சிறுமியின் சகோதரர்கள் உட்பட நான்கு சிறுவர்கள் பொலிஸ் பாதுகாப்பில் உள்ளனர்.