‘தனி ஈழம் வேண்டாம்; ரூ. 1,000 சம்பளமே வேண்டும்’

பெருந்தோட்ட மக்கள் தனி ஈழக் கோரிக்கையை அரசாங்கத்திடம் முன்வைக்கவில்லை எனத் தெரிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் ​சுரேஷ், அடிப்படைச் சம்பளத்தை ஆயிரமாக அதிகரிக்க, அரசாங்கத்தின் ​அழுத்தங்கள் தேவை எனவும் தெரிவித்துள்ளார். ராஜகிரியவில் இடம்பெற்ற முதலாளிமார் சம்மேளனத்துடனான கலந்துரரையாடலின் பின்னர், அதில் கலந்து கொண்ட அனைத்து தொழிற்சங்க பிரதிநிதிகள் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், கூட்டு ​ஒப்பந்தம் நேற்று (நேற்று முன்தினம்) நிறைவடைந்துள்ளது. தொடர்ச்சியாக இடம்பெற்ற கூட்டு ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகளின் பலனாகத் தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பளம் உள்ளிட்ட மற்றைய கொடுப்பனவுகள் அதிகரிக்கப்பட்டு வந்திருந்தாலும் 1000 ரூபாய் அடிப்படைச் சம்பளம் என்ற இலக்கு இன்னும் அடையப்படவில்லை எனவும் தெரிவித்தார். தற்போதும் 100 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் அதனை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அரசாங்கத்தின் பக்கத்திலிருந்தும் தொழிற்சங்கங்களின் பக்கத்திலிருந்தும் 1000 ரூபாய் சம்பள அதிகரிப்பைக் கோரும் அழுத்தங்களைத் தொடர்ச்சியாக விடுக்கத் தீர்மானித்துள்ளோம் எனவும் கூறினார்.

கடந்த காலத்தில் கம்பனிகள் கூட்டு ஒப்பந்தத்தை மீறிச் செயற்பட்டிருந்ததால் தற்போது அடிப்படை சம்பளத்தை அதிகரிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நாம் உறுதியாக இருக்கிறோம். அதனால் தீபாவளிக்கு முன்னர் இந்த இலக்கை அடைய முடிந்தால் நாம் மகிழ்ச்சியடைவோம் எனவும் அவர் இதன்போது தெரிவித்தார். அண்மையில் வரவு செலவுத்திட்டமும் வரவுள்ள நிலையில் அரசாங்கம் இந்த விவகாரத்தில் அவதானம் செலுத்த வேண்டிய நி​லைமையும் ஏற்படும். எனவே 1000 ரூபாய் கிடைக்கும் வரையில் கூட்டு ஒப்பந்தத்தில் நாம் கைசாத்திடப்போவதில்லை. மேலும், கூட்டு ஒப்பந்தத்தை வெளிப்படையான ஒரு சூழலில் கைச்சாத்திடவும் நாம் தயாராகவே உள்ளோம் என்றார்.