தாகத்தால் துடிதுடித்து இறந்த 49 பேரின் சடலங்களும் பொதுக் கல்லறையில் அடக்கம்

அகாடெஸ் (Agadez) ஆளுநரகத்தின் உத்தியோகபூர்வ முகநூல் (Facebook) பதிவொன்றின்படி, உயிரிழந்தவர்கள் அனைவரும் முஸ்லிம்களின் புனித பண்டிகையான ஈகைத் திருநாளை (ஈத் அல்-ஆதா – பெருநாள்) தத்தமது குடும்பங்களுடன் நைஜரில் கொண்டாடுவதற்காக மாலியில் (Mali) இருந்து திரும்பிக்கொண்டிருந்த ஒரு குழுவினர் ஆவர். துரதிர்ஷ்டவசமாக, பாலைவனத்தின் நடுவே அவர்களின் லொறி பழுதடைந்ததை அடுத்து, அவர்களிடம் இருந்த குடிநீர் தீர்ந்துபோயுள்ளது.

“அசமகா (Assamaka) பகுதிக்கு மேற்கே 80 கிலோமீற்றருக்கும் (50 மைல்கள்) அதிக தூரத்திலுள்ள ஒரு  பகுதியிலேயே இந்த 49 பேரும் தாகத்தினால் உயிரிழந்துள்ளனர்,” என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அசமகா என்பது நைஜர் மற்றும் அல்ஜீரியாவுக்கு இடையிலான பிரதான எல்லைக் கடவை என்பதுடன், இது மாலி எல்லையையொட்டிய பகுதியிலும் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

“குடிநீர் இல்லாத நிலை மற்றும் லொறியின் ஓட்டுநர், அவரது உதவியாளர்கள் மற்றும் பயணிகள் இணைந்து எடுத்த முயற்சிகளுக்கு மத்தியிலும் வாகனத்தைப் பழுதுபார்க்க முடியாமல் போனதால், பயணிகள் இந்த ஆபத்தான சூழலுக்குள் சிக்கிக்கொண்டனர். கடுமையான வெப்பநிலையும், நீர் நிலைகள் இல்லாத நிலையும் இவ்வாறானதொரு சூழலில் உயிர்வாழ்வதை உன்னதமான சவாலாக மாற்றுகின்றன,” என ஆளுநரகம் தெரிவித்துள்ளது. அத்துடன், மீட்புக்குழுவினர் உயிரிழந்தவர்களின் உடல்களைப் பொதுக் கல்லறைகளில்   அடக்கம் செய்துள்ளதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்தக் கொடூரமான சூழ்நிலையிலும் இருவர் மாத்திரம் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளனர். அவர்கள் இருவரும் சுமார் 50 கிலோமீற்றருக்கும் (31 மைல்கள்) அதிக தூரம் கால்நடையாகவே நடந்து சென்று, ஒரு நீர் நிலையை அடைந்துள்ளனர். அதன் பின்னர் அங்கிருந்து அசமகா பகுதிக்குச் சென்று அதிகாரிகளுக்குத் தகவல் வழங்கியதாக ஆளுநரகம் தெரிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, அகாடெஸ் பிராந்திய ஆளுநர் ஜெனரல் இப்ரா பௌலாமா இஸா (Ibra Boulama Issa) தலைமையிலான குழுவொன்று சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. நைஜர் எல்லையிலிருந்து சுமார் 300 கிலோமீற்றர் (187 மைல்கள்) தொலைவிலுள்ள மாலியின் தல்ஹாண்டெக் (Talhandek) நகரிலிருந்து புறப்பட்ட அந்த லொறி, பழுதடைவதற்கு முன்னதாக ஏழு நாட்கள் பயணித்துள்ளது என்பதை அக்குழுவினர் கண்டறிந்துள்ளனர்.

லொறி பழுதடைந்ததற்கான துல்லியமான காரணம் என்ன அல்லது பயணிகள் எவ்வளவு காலம் அங்கு காத்திருந்தார்கள் என்பது உடனடியாகத் தெளிவாகத் தெரியவில்லை. எனினும், ஓட்டுநர் மற்றும் பயணிகளால் லொறியைப் பழுதுபார்க்க எடுக்கப்பட்ட முயற்சிகள் தோல்வியடைந்ததாக உயிர் பிழைத்தவர்கள் நினைவு கூர்ந்துள்ளனர். “சம்பவ இடத்தில் காணப்பட்ட காட்சிகள் மிகவும் அதிர்ச்சியளிக்கக் கூடியதாக இருந்தன. அசைவற்று நின்ற அந்த லொறியின் அடியிலும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் டசின் கணக்கிலான உயிரற்ற உடல்கள் சிதறிக்கிடந்தன,” என அகாடெஸ் ஆளுநரகம் கவலையுடன் தெரிவித்துள்ளது.

ஆபிரிக்க நாடுகளிலிருந்து ஐரோப்பாவை நோக்கிச் செல்ல முற்படும் அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்தோரின் பிரதான போக்குவரத்துப் பாதையாக இந்த பாலைவன வலயமே காணப்படுகிறது என்பதுடன், சுட்டெரிக்கும் மணல் பரப்பில் தாகம் மற்றும் பசி காரணமாகப் பலர் இவ்வாறே உயிரிழக்க நேரிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply