தோழர் வசந்தன் இற்கு எமது அஞ்சலி

யாழ்/திருநெல்வேலி தபால்பெட்டி ஒழுங்கையில் உள்ள வாசிகசாலைக்கு அருகில் உள்ள இல்லத்தில் பிறந்த மனேஜர் தோழர் பரமேஸ்வராக் கல்லூரியில் கல்லூரி(இன்றைய பல்கலை கழகம்) யில் கல்வி பயின்றார். பின்னர் தனியார் கல்வி நிறுவனமொன்றில் தோழர் பத்மநாபாவுடன் சேர்ந்து கல்வி பயின்றார். அன்று இருவருக்கும் தொடங்கிய நட்பு தோழர் நாபாவின் மறைவுவரை நண்பராக தோழராக நீடித்தது.

பல நோக்கு கூட்டுறவு சங்கத்தின் திருநெல்வேலி கிளையில் மனேஜராக கடமையாற்றிய போது மானேஜர் தோழர் ஈ.பி.ஆர்.எல்.எவ்.இல் இணைந்து கொண்டார். இலண்டனில் இருந்து நாடு திரும்பிய தோழர் நாபா இவருடைய வீட்டில் சிறிது காலம் தங்கியிருந்தார்.ஜேர்மனிக்கு புலம் பெயர்ந்த மனேஜர் தோழர் பொகும் (Bochum) நகரில் வசித்து வந்தார்.

அங்கு தனது இயக்கப் பணிகளை ஆரம்பித்தார். தனது ஆளுமையால் ஒரு கால கட்டத்தில் பொகும் நகரை ஈ. பி. ஆர். எல். எவ். இன் மிகச்சிறந்த ஆதரவுத் தளமாக வைத்திருந்தார். முதலாவது தியாகிகள் தினத்தை தனது நகரில் நடாத்தி துணிச்சலையும் ஆற்றலையும் வெளிப்படுத்திய தோழர். கார் அல்லது வேறு வாகன வசதிகள் தோழர்களிடம் இல்லாத காலத்தில் (1985_1986) தொடருந்துகளில் தோழர்களுடன் இணைந்து பயணம் செய்து ஜேர்மனியில் பெரும்பாலான நகரங்களில் ஈ.பி. ஆர்.எல்.எவ்.இன் பிரச்சார வேலைகளில் இயக்கத்தின் பத்திரிகை கள் சஞ்சிகைகள் மக்களுக்கு விநியோகிப்பதில் பெரும் பங்காற்றிய தோழர்.

ஈ.பி.ஆர்.எல்.எவ் ஜேர்மனியில் 1986இல் கொடி தினம் ஒன்றை அனுஸ்டித்தது. அதற்காக ஈ.பி.ஆர்.எல்.எவ்.இன் இலட்சினை பொறித்த கொடி ஒன்றினை அறிமுகம் செய்தது. அக்கொடியினை நகரங்களுக்கு சென்று மக்களுக்கு தோழர்கள் அறிமுகம் செய்தனர். தான் சார்ந்த அமைப்பை மக்களிடம் வளர்க்க வேண்டும் என்பதற்காக தனித்து பல நகரங்களுக்குச் சென்று கொடியினை அறிமுகம் செய்த உன்னத தோழர். ஜேர்மனியில் பேர்லின் நூறன்பேரக் சோஸ்ற் போன்ற பல நகரங்களிலும் சுவிற்சிலாந்திலும் தியாகிகள் தினம் நடாத்த தோழர்களுடன் பயணித்தவர்.

நிகழ்ச்சிகள் சிறப்புற நடைபெற அயராது உழைத்த தோழர்.தோழர். சுரேஸ் பிரேமச்சந்திரன் தோழர். யோகசங்கரி ஆகியோர் 1988இல் ஜேர்மனி வந்த போது மக்களுடனான சந்திப்புகளுக்கு பல நகரங்களுக்குச் சென்றனர். அப்போது அவர்களை தனது காரில் கூட்டிச் செல்வதில் பெரும் பங்காற்றியவர். தான் சார்ந்த இயக்கத்தை கட்சியை வளர்ப்பதில் அக்கறையோடு தூய்மையோடு செயற்பட்ட உன்னத தோழரை நாம் பெளதீகரீதியாக இழந்திருக்கின்றோம். ஆனாலும் ஈ.பி.ஆர்.எல்.எவ் உள்ளவரை தோழர்களின் மனதில் தோழர் நிலைத்திருப்பார்.தோழர். அருந்தவராஜா