நியாயமான சம்பளத்திற்காகவும் நியாயமற்ற நிபந்தனைகளுக்கு எதிராகவும் தொழிலாளர்கள் அணித்திரண்டு போராட வேண்டும்

முதலாளிமார் சம்மேளனத்தினால் நாட் சம்பளமாக ரூபா. 1000/= பெறக்கூடிய ஒரு முறையை பேச்சுவார்த்தையில் முன்வைக்கப்பட்டு அது தொழிற்சங்கங்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக ஊடகங்களில் செய்திகள் வந்திருந்தன. எனினும் முதலாளிமார் சம்மேளனம் அந்த முறையை பகிரங்கப்படுத்த முடியாது என குறிப்பிட்டிருந்தது. அந்த முறை தொடர்பாக தொழிற்சங்கங்கள் தங்களது உறுப்பினர்களுடன் பேசிவிட்டு முடிவு தெரிவிக்க உடன்பட்டதாக முதலாளிமார் சம்மேளனம் குறிப்பிட்டிருந்தது. தொழிற்சங்கங்களும் அதனை பகிரங்கப்படுத்தாத நிலையில் முதலாளிமார் சம்மேளனம் முன்வைத்த சம்பள முறை என்ன என்பது மூடு மந்திரமாகவே உள்ளது.

முதலாளிமார் வழங்கி இருக்கும் சம்பள முறை தொழிலாளர்கள் மீது வேலை சுமையை மேலும் அதிகரித்து பொருந்தோட்டத் துறையை முறைசாரா தொழிற்துறையாக மாற்றி அதிக இலாபத்தை கைப்பற்றுவதை நோக்கமாகவே கொண்டிருக்கிறது என அறிய முடிகிறது. கூட்டு ஒப்பந்தத்தில் தொழிலாளர்கள் சார்பாக கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள் இன்று தங்களுக்குள் ஒன்றுமை இன்றி செயற்படுகின்றன. தொழிற்சங்கம் மற்றும் பெருந்தோட்டத் தொழிற்துறை பற்றிய போதிய அனுபவமற்றவர்கள் தொழிலாளர்களுக்காக முதலாளிமார் சம்மேளனத்துடன் பேச்சுவாத்தையில் ஈடுபடுகின்றனர். இவ்வாறான தவறான நடவடிக்கைகள் தொழிலாளர்களையே பாதித்து வருகின்றன. எனவே இதனை உணர்ந்து நாட் சம்பளமாக ரூபா. 1000/= வழியுறுத்தியும் தற்போது நிலவும் தொழில் உரிமைகளையும், தொழிற்துறையையும் தக்கவைத்துக் கொள்வதற்காகவும் தொழிலாளர்கள் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டு வேண்டும். இவ்வாறு கூட்டு ஒப்பந்தம் தொடர்ந்து கைச்சாத்திடப்படாதிருக்கின்றமை தொடர்பில் மக்கள் தொழிலாளர் சங்கம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் அதன் பொதுச் செயலாளர் சட்டத்தரணி இ. தம்பையா குறிப்பிட்டார்.

மக்கள் தொழிலாளர் சங்கத்தின் மத்தியகுழு சார்பாக வெளியிடப்பட்டுள்ள அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

மலையக மக்களின் வாக்குகளால் பாராளுமன்றத்திற்கு தெரிவான பொருந்தோட்டத் துறை அமைச்சர் நவீன் திசாநாயக்க தேயிலை, இறப்பர் விலை வீழ்ச்சியுற்றுள்ள நிலையில் நாட்சம்பளமாக ரூபா. 1000/= கோருவது ஏற்க முடியாது என்று குறிப்பிட்டுள்ளார். அதேநேரம் தமிழ் முற்போக்கு முன்னணி என்ற அமைப்பின் தலைமைகள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கவனத்திற்கு கொண்டுவந்து சம்பள பிரச்சினையை தீர்ப்பதாக கூறியிருந்த போதும் இதுவரை பிரதமர் அது தொடர்பாக நடவடிக்கை எடுத்ததாக தெரியவில்லை. இ.தொ.கா. தோர்தலுக்காக முன்வைத்த ரூபா. 1000/= நாட்சம்பள என்ற கோரிக்கையை படிப்படியாக கைவிட்டுள்ளது. இந்த பின்னணியில் மீண்டும் ஒரு முறை தீபாவளி பண்டிகையை பயன்படுத்தி தொழிலாளர்களால் ஏற்க முடியாத சம்பளத்தையும் நிபந்தனைகளையும் தொழிலாளர்கள் மீது திணிக்க நடவடிக்கை எடுக்கப்படுகின்ற நிலைமை காணப்படுகிறது. எனவே கூட்டு ஒப்பந்தம் இழுத்தடிக்கப்பட்டு நியாயமான சம்பளம் மறுக்கப்படுகின்றமைக்கும், தொழிற்துறையை பாதிக்கின்ற, தொழிலாளர்களின் உரிமைகளை மீறுகின்ற செயற்பாடுகளை மக்கள் தொழிற்சங்கங்களை கடந்து எதிர்க்க முன்வர வேண்டும்

(P.W.U. Sri Lanka)