நீண்ட கால பிரதமர் படுதோல்வி

கிழக்கு கரீபியன் கடலில் உள்ள தீவு நாடான செயின்ட் வின்சென்ட் மற்றும் கிரெனடைன்சில், கடந்த 27ஆம்  திகதி பொதுத் தேர்தல் நடந்தது. இதில், அந்நாட்டில் 24 ஆண்டுகளாக பிரதமராக இருந்த ரால்ப் கோன்சால்வ்ஸ், ஒற்றுமை தொழிலாளர் கட்சி சார்பில் போட்டியிட்டார். நாடு முழுதும், அவரின் கட்சி சார்பில் வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர்.

அவர்களை எதிர்த்து, காட்வின் பிரைடேவின் புதிய ஜனநாயக கட்சி போட்டியிட்டுள்ளது. 

தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டதன் முடிவில், போட்டியிட்ட 15 இடங்களில், 14 இடங்களை கைப்பற்றி புதிய ஜனநாயக கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது. 

ஒற்றுமை தொழிலாளர் கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களில் ரால்ப் மட்டுமே வெற்றி பெற்றுள்ளார். அவரது கட்சி தோல்வியை தழுவியதை அடுத்து பிரதமர் பதவியை இழந்துள்ளார்.

இதன் வாயிலாக, ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட உலகின் நீண்ட கால பிரதமர் என்ற பெருமையை அவர் இழந்துள்ளார். 2001 – 2025 நவம்பர் வரை தொடர்ந்து பிரதமராக ரால்ப் பதவி வகித்தார். 

கரிபீயன் பிராந்தியத்தில் நீண்ட கால பிரதமரும் இவரே. அரசுக்கு எதிரான மனநிலையே அவரது தோல்விக்கு காரணம் என, கூறப்படுகிறது. புதிய ஜனநாயக கட்சியின் தலைவரான காட்வின் பிரைடே, புதிய பிரதமராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.