பதற்றத்தில் இலங்கை

அரசாங்க ஆதரவு மற்றும் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 151ஆக அதிகரித்துள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முன்னாள் அமைச்சர் ஜோன்சன் பெர்னாண்டோவின் குருநாகலிலுள்ள கட்சி அலுவலகம் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் அலுவலகத்துக்கு தீவைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற  உறுப்பினர்களின் வீடுகள் சிலவற்றின் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருவதுடன், தீவைப்பு சம்பவங்களும் பதிவாகியுள்ளன.

இந்திக அனுருத்தவின் வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதுடன் நிமல் லன்சா எம்.பியின் வீடு தீவைத்து எரிக்கப்பட்டுள்ளது.

அரசாங்க ஆதரவாளர்களை ஏற்றிவந்த தனியார் பஸ்ஸொன்று மாளிகாவத்தை பகுதியில் வைத்து தீவைப்பு

பொலன்னறுவை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள நிட்டம்புவ துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அமைதியான போராட்டக்காரர்களுக்கு எதிரான வன்முறையை இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் கண்டித்துள்ளதுடன், முழுமையான விசாரணை நடத்துமாறு அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டுள்ளார்.