பிரபல போதைப்பொருள் வியாபாரி யாழில் கைது

யாழ்.மாவட்டத்தில் பரவலாக போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வருபவர் என பொலிஸாரினால் அடையாளம் காணப்பட்ட உரும்பிராய் செல்வபுரம் பகுதியை சேர்ந்த 28 வயதுடைய நபர் திங்கட்கிழமை மாலை செல்வபுரம் பகுதியில் வைத்து 5 கிராம் 400 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். 

குறித்த நபர் நீண்டகாலமாக போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வருபவர் எனவும், நீண்ட காலமாக தேடப்பட்டு வந்த நிலையில் தலைமறைவாகி இருந்தார் எனவும் , கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ள நபரை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் தெரிவித்தனர். 

இதேவேளை, கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்வியங்காட்டு பகுதியில் , 1கிராம் 400 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் மேலும் ஒருவர் பொலிஸாரினால் நேற்றைய தினம்   கைது செய்யப்பட்டுள்ளார். 

கைது செய்யப்பட்ட நபர் நல்லூர் பகுதியை சேர்ந்தவர் எனவும் , கைது செய்யப்பட்ட நபரை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து தாம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.