புளொட் பிரதிநிதிகளை பேரவையினர் வெளியேற்றியுள்ளனர்

தமிழ் மக்கள் பேரவையின் கூட்டத்துக்குச் சென்ற புளொட் அமைப்பின் பிரதிநிதிகளை, பேரவையினர் வெளியேற்றியுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது. யாழ்ப்பாணம், பலாலி வீதியிலுள்ள தமிழ் மக்கள் பேரவையின் அலுவலகத்தில் பேரவையின் கூட்டம் நடைபெறுமென அறிவிக்கப்பட்டிருந்தது. இக்கூட்டத்துக்கு பேரவையில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கும் பொது அமைப்புகளின் பிரதிதிநிதிகள் பேரவை உறுப்பினர்கள் எனப் பலருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இதற்கமைய புளொட் அமைப்பின் சார்பில் அக்கட்சியின் செயலாளர் சதானந்தம் மற்றும் பொருளாளரும் வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான சிவனேசன் ஆகியோர் சென்றிருந்தனர்.

இந்நிலையில், கூட்டம் ஆரம்பமாவதற்கு சில மணி நேரத்துக்கு முன்னதாக அங்கு சென்ற புளொட் அமைப்பின் பிரதிநிதிகளை பேரவையின் இணைத்தலைவர்களில் ஒருவரான வைத்திய கலாநிதி பூ.லக்ஸ்மன், அங்கிருந்து வெளியேறுமாறு கூறியுள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் புளொட் அமைப்பின் பொருளாளரும் முன்னாள் அமைச்சருமான சிவனேசனிடம் கேட்ட போது, அவர் தெரிவித்துள்ளதாவது,

“நாங்கள் கூட்டத்துக்கு சரியான நேரத்துக்கே வந்திருந்தோம். அப்போது இக்கூட்டத்தில் நாங்கள் பங்கு பற்ற முடியாது என்றும் அங்கிருந்து வெளியேறுமாறும் இணைத் தலைவர்களில் ஒருவரான லக்‌ஷ்மன் தெரிவித்தார்” என்றார்.

“இதனையடுத்து நாங்கள் அங்கிருந்து வெளியேறி இந்த விடயங்கள் தொடர்பில் கட்சித் தலைவருக்கும் தெரியப்படுத்தி இருக்கின்றோம். இதேவேளை இக்கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு பேரவையால் எமது கட்சிக்கு அழைப்பு விடுக்கப்பட்டதற்கமையவே நாங்கள் வந்திருந்தோம்” என்றார்.

“ஆகவே, பேரவையின் இணைத் தலைவர்களில் ஒருவரான லக்ஸ்மன், திடீரென ஏன் இன்று இவ்வாறு நடந்து கொண்டார் என்று தெரியவில்லை” என்றும் சிவனேசன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து, தமிழ் மக்கள் பேரவையின் உறுப்பினர் கலாநிதிநி சரவணபவன் தெரிவிக்கையில்,

புளொட் அமைப்பு வௌியேற்றப்பட்டதாக வௌியான செய்தியில் எவ்வித உண்மையுமில்லை.

தொடர்பாடல் பிரச்சினை காரணமாகவே, அவர்கள் ஏற்றுக்கொள்ளப்படவில்லையெனவும் அவர் தெரிவித்தார்.

அதாவது, வழமையாக தமிழ் மக்கள் பேரவையின் மத்திய குழுக்கூட்டத்தில் கலந்துகொள்பவர்கள், அந்தக் கட்சி சார்ந்த பொறுப்பு கூறுபவர்கள் அல்லது கட்சித் தலைவர்கள் இன்றைய கூட்டத்தில் கலந்துகொள்ளத் தவறியதன் காரணமாக, தனக்கு பதிலாக, வேறொருவர் கலந்துகொள்பவர்கள் குறித்து, பேரவைக்குத் தெரியப்படுத்தி, அனுமதிபெற்று, அவர்கள் அனுப்பப்பட்டனர்.

ஆனால், புளொட் சார்பில், பொறுப்பு கூறுபவர்களோ அல்லது கட்சித் தலைவரோ கலந்துகொள்ளாது, அவர்களுக்குப் பதிலாக வெறோருவரை அனுப்பியுள்ளனர். அவ்வாறு கலந்துகொண்டவர்கள் தொடர்பில் முன்கூட்டியே தெரியப்படுத்தி அனுமதிபெறாததையடுத்தே, அவர்களை இன்றைய கூட்டத்தில் ஏற்றுக்கொள்ளவில்லையென, அவர் மேலும் கூறினார்.