மக்கள் எழுச்சியை கண்டு அஞ்சி நடுங்கும் மேட்டுக்குடி அரசியல்

தேர்தல் பரப்புரையின் இறுதிநாளில் மக்கள் மேம்பாட்டு ஐக்கிய முன்னணியால் புத்தூர் கலைமதி விளையாட்டுத் திடலில் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்திற்கு வழங்கப்பட்டிருந்த அனுமதியை, அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்து இறுதி நிமிடத்தில் ரத்து செய்திருக்கிறார்கள் தமிழ் பிற்போக்குத் தலைமைகள்.

மக்கள் மேம்பாட்டு ஐக்கிய முன்னணியின் பின்னால் மக்கள் அணிதிரள்வதை ஆளும்வர்க்க அயோக்கியத் தலைமைகளால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. இந்தத் தேர்தலில் வெற்றியை நோக்கிப் பட்டம் முன்னேறுவது பிற்போக்குத் தலைமைகளின் அதிகார ஆசைக்கு சவாலாக இருப்பதையும், தமக்கும் பாராளுமன்ற ஆசனத்துக்கும் குறுக்காக உழைக்கும் மக்கள் வருவதையும், தமது மேலாதிக்க போக்கை ஒடுக்கப்பட்ட மக்கள் எதிர்த்து நிற்பதையும் கண்டு அஞ்சுகிறார்கள்.

பேரினவாத அரசின் காலில் விழுந்தாவது உழைக்கும் தமிழ் மக்களின் எழுச்சியை தடுக்க அவர்கள் துணிந்துவிட்டார்கள். பட்டம் சின்னத்திற்கு எதிராக இறுதி நேரத்தில் முன்னெடுக்கும் செயற்பாடுகள் இவர்களின் பிற்போக்கு முகமூடிகளை மேலும் கிழித்துக்காட்டியிருக்கிறது.

இவர்கள் மறந்துபோன உண்மையென்னவென்றால், உழைக்கும் மக்களின் எழுச்சியை இவர்களின் வண்ம அரசியலால் தடுக்கமுடியாது. தமது அதிகார ஆசைக்காக உழைக்கும் மக்களிற்கு எதிராக ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தும் இழிசெயலை உழைக்கும் மக்கள் மறக்கமாட்டார்கள் என்பதையும் அவர்களுக்கு மக்கள் உணர்த்துவார்கள்.

நடக்க இருந்த கூட்டத்தை தடுத்து நிறுத்திவிட்ட அவர்களது சந்தோசத்தை ஒரு மணிநேரத்திலே தகர்த்து எறிந்தார்கள் எம் மக்கள். மாற்று இடத்தில் அவசரமாக ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்திலேயும் அணிதிரண்டு வந்து கூட்டத்தை வெற்றிகரமாக நடாத்தி பிற்போக்குத் தலைமைகளுக்கு செருப்படி வழங்கியிருக்கிறார்கள்