மட்டக்களப்பில் கறுப்பு, வெள்ளை நிறத்தில் சுவரொட்டிகள்

பிறக்கவிருக்கின்ற புத்தாண்டுக்கு வாழ்த்துக்கூறும் முகமாக, வெள்ளைத்தாளில் கறுப்பு எழுத்தில் ஆட்சியாளர்களுக்கும் அதிகாரிகளுக்கும் எமது புத்தாண்டு வாழ்த்துகள் என எழுதப்பட்டும் அதன் கீழே, நாங்கள் தெருவோரப் பட்டதாரிகள் என குறிப்பிட்டும், மட்டக்களப்பு நகர் பகுதியில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. குறித்த சுவரொட்டிகள், தமிழ் மற்றும் சிங்களம் ஆகிய இருமொழிகளிலும் அச்சிடப்பட்டுள்ளன. மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள், தமக்கான நியமனத்தினை வழங்ககோரி, மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக இன்று (12), 51ஆவது நாளாகவும் சத்தியாக்கிரகப் போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.

புதுவருடம் பிறக்கவிருக்கின்ற நிலையிலும், தமக்கான தீர்வினை அதிகாரிகளும்அரசியல்வாதிகளும் பெற்றுக்கொடுக்கவில்லை. இந்நிலையில், புத்தாண்டினை கறுப்பு ஆடை அணிந்து வரவேற்கவுள்ளதாகவும், கறுப்பு, வெள்ளை வர்ணங்களை பயன்படுத்தி அரசியல்வாதிகளுக்கும், அதிகாரிகளுக்கும் வாழ்த்துகளையும் தெரிவிக்கும் வகையில் சுவரொட்டிகளையும் காட்சிப்படுத்தியுள்ளனர்.