யாழில் வாள்வெட்டு: ஸ்தலத்துக்குச் செல்ல பொலிஸார் தாமதம்?

யாழ்ப்பாணம், குருநகர் பகுதியில், நேற்று (12) இரவு இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில், இளம் குடும்பஸ்தர் உட்பட இருவர் படுகாயமடைந்த நிலையில், யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குருநகர், உத்தரிய மாதா ஆலயச் சந்தியிலுள்ள சலவைத் தொழிலகமொன்றுக்கு அந்த பகுதியைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தரொருவர் சென்றுள்ளார். இதன்போது, அந்தக் குடும்பஸ்தரைப் பின்தொடர்ந்துச் சென்ற சிலர், அவரை வாளால் வெட்டியுள்ளதுடன், சலவைத் தொழிலக உரிமையாளரையும் தாக்கிவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.

இதுதொடர்பில் அறிவிப்பதற்காக, அந்தப் பகுதி மக்கள், யாழ். பொலிஸ் நிலையத்துக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டபோதும், பொலிஸார் தொலைபேசி அழைப்புக்குப் பதிலளிக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், அவர்கள் பொலிஸாரின் அவசர உதவிச் சேவை பிரிவின் தொலைபேசி இலக்கத்துக்குத் தொடர்பு கொண்டு, சம்பவம் தொடர்பில் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து ஒரு மணித்தியாலத்துக்குப் பின்னரே சம்பவ இடத்துக்கு பொலிஸார் வந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.