யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே, பல்கலைக்கழக மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகள் இத்தகவலைத் தெரிவித்தனர்.
அங்கு அவர்கள் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்:
“முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு நாம் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகிறோம். அந்த வகையில், வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் ‘முள்ளிவாய்க்கால் கஞ்சி’ விநியோகிக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.
இதன் தொடர்ச்சியாக, தமிழினப் படுகொலையை வெளிப்படுத்தும் வகையில் மே 16ஆம் திகதி ஆரம்பமான ‘நினைவாயுதம்’ ஓவிய, புகைப்பட மற்றும் ஆவணக் கண்காட்சி மே 18ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. அத்துடன், பாடசாலை மற்றும் பல்கலைக்கழக மாணவர்களிடையே ‘கந்தகபூமி உயிர் வலியின் மொழி’ என்ற தலைப்பில் கவிதைப் போட்டியொன்றையும் நாம் நடத்தியிருந்தோம்.
முள்ளிவாய்க்காலில் எமது மக்களுக்கு இழைக்கப்பட்ட இனப்படுகொலை தொடர்பான ஆதாரபூர்வமான தரவுகள், ஒளிப்படங்கள் மற்றும் ஆவணங்களை இளையோர் மத்தியில் கொண்டு சேர்க்கும் ஒரு வரலாற்றுப் பதிவாகவே இந்தக் கண்காட்சியை நாங்கள் நடத்தவுள்ளோம்” என்றனர்.