ரணிலின் பதவிப் பேராசைக்காக நாட்டை பலிகொடுக்க வேண்டாம்

நாட்டு மக்களுக்கு விசேட அறிவிப்பை விடுத்து உரையாற்றும்போதே அநுர மேற்கண்டவாறு தெரிவித்தார். 

தொடர்ந்து உரையாற்றிய அவர், நாடு தீர்மானமிக்க இடத்துக்கு வந்துள்ளதால் அரசியல்வாதிகளும், பொதுமக்களும் புத்திசாலித்தனமாக நடந்துக்கொள்ளவில்லை என்றால் நாட்டில் மோசமான நிலையொன்று ஏற்படும்.

குறிப்பாக இன்று (13) ஜனாதிபதி பதவி விலகுவதாக சபாநாயகர் அறிவித்திருந்தார். எனினும் இன்று நண்பகல் வரையில் ஜனாதிபதி பதவியிலிருந்து விலகுவதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. பதில் ஜனாதிபதியாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளதாக எமக்குக் கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன என்றார்.

அடக்குமுறைகளை மேற்கொள்ளவும் ஜனநாயகரீதியற்றவகையில் செயற்படுவதற்கும் ரணில் தனக்குக் கிடைத்திருக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி முயற்சிகளை மேற்கொள்கிறார் எனவும் தெரிவித்தார். 

இதன்படியே மேல்மாகாணத்தில் ஊரடங்குச் சட்டம் அமல்ப்படுத்தப்பட்டுள்ளது. போராட்டக்காரர்களுக்கு எதிராக பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ரணில் பயன்படுத்துவதற்கு முயற்சிப்பதாக அறிய முடிகிறது எனவும் தெரிவித்தார்.

தயவு செய்து மக்களின் குரலுக்கும், மக்களின் அபிலாசைகள், நோக்கங்களுக்கு செவிசாய்க்க வேண்டும். அவ்வாறில்லாது தனிமனிதரின் அதிகாரப் பேராசைக்காக நாட்டையும், நாட்டு மக்களையும் பலிகொடுக்க வேண்டாம் எனவும் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

அவசரக்காலச் சட்டம் அமல்ப்படுத்தப்பட்டுள்ளது. இதுவொரு அடக்குமுறையான சட்டம். அரசாங்கத்துக்கு எவ்வாறான அடக்குமுறை தேவைகள் இருந்தாலும் மக்களை அடக்குமுறைக்கு உட்படுத்தும் எந்தவொரு உத்தரவுகளுக்கும் இராணுவம், விமானப்படை, கடற்படை என முப்படையினரும் செவிசாய்க்கக்கூடாது. மக்களின் பக்கம் முப்படையினர் நிற்க வேண்டும். கண்ணீர்புகை, நீர்த்தாரைப் பிரயோகங்கள் உள்ளிட்ட தாக்குதலை மக்களுக்கு எதிராக மேற்கொள்ள வேண்டாம். அதுபோல உங்களது ஆயுதங்களையும் மக்கள் பக்கம் திருப்ப வேண்டாம் என்றார்.