வடக்கு, கிழக்கு அபிவிருத்தி: கூடியது செயலணி

நீண்டகாலமாக இடம்பெற்று வந்த யுத்தம் காரணமாக பின்னடைவுக்கு உள்ளாகியுள்ள வடக்கு, கிழக்கு மாகாணங்களில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை துரிதப்படுத்தும் நோக்கில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நியமிக்கப்பட்ட விசேட ஜனாதிபதி செயலணி, நேற்று (30) பிற்பகல், ஜனாதிபதி செயலகத்தில், ஜனாதிபதி தலைமையில், முதல் முறையாக ஒன்றுகூடியது.இந்த அபிவிருத்தி வேலைத்திட்டங்களை, முறையாகவும் வினைத்திறனாகவும் மேற்கொண்டு, மக்களுக்குத் துரித நன்மைகளைப் பெற்றுக்கொடுக்க வேண்டுமென, இதன்போது, ஜனாதிபதி வலியுறுத்தினார்.

வடக்கு, கிழக்கு மக்களின் வாழ்க்கையை மீளக்கட்டியெழுப்பவும் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்யவும், அரசாங்கத்தால், கடந்த மூன்றரை வருட காலத்துக்குள், பாரிய பங்களிப்பு வழங்கப்பட்டுள்ள போதிலும், அது தொடர்பில் மக்களுக்கு போதியளவு புரிந்துணர்வு கிடைக்கப்பெறவில்லையென்றும் இதன்போது அவர் கூறினார்.

அத்துடன், மக்களிடையே, தேசிய நல்லிணக்கத்தையும் சகவாழ்வையும் கட்டியெழுப்புவதற்காக, அரசாங்கம் முன்னெடுத்துவரும் வேலைத்திட்டத்துக்கு, சாதகமான பெறுபேறு கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

26 வருட யுத்தம் காரணமாக, வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தடைப்பட்டுள்ள அபிவிருத்தி செயற்பாடுகளையும் பின்னடைவுக்குள்ளாகியுள்ள மக்களின் வாழ்க்கையையும், மீண்டும் கட்டியெழுப்பி, நாட்டின் ஏனைய மாகாணங்களைப் போன்றே அவ்விரு மாகாணங்களிலும் அபிவிருத்தியை ஏற்படுத்த அரசாங்கம் முன்னுரிமையளித்து செயற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஜுன் 5ஆம் திகதி, விசேட வர்த்தமானி அறிவித்தலினூடாக, ஜனாதிபதியால், இந்தச் செயலணி நியமிக்கப்பட்டுள்ளதுடன், அதன் தலைவராக ஜனாதிபதியே செயற்பட்டு வருகின்றார்.

இந்த செயலணியின் ஏனைய உறுப்பினர்களாக, பிரதமரும் மேலும் 15 அமைச்சரவை அமைச்சர்களும், இரு மாகாணங்களின் ஆளுநர்களும், முதலமைச்சர்களும், சில அமைச்சுக்களின் செயலாளர்களும், முப்படை தளபதிகளும் செயற்படுகின்றனர்.

இந்த ஜனாதிபதி செயலணியினால், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நடைமுறைப்படுத்தப்படும் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பாக கண்டறியப்படுவதுடன், நடைமுறைப்படுத்த வேண்டிய புதிய செயற்றிட்டங்கள் தொடர்பிலும் திட்டமிடப்படும். முன்னுரிமைய அளிக்கப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பாக ஆராய்ந்து, குறித்த துறைகளையும் குழுக்களையும் இலக்காகக் கொண்டு, புதிய அபிவிருத்தி வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் தேசிய பொருளாதாரத்துக்கு, மேல் மாகாணத்தினால் 40 சதவீத பங்களிப்பு வழங்கப்படுவதுடன், வட மாகாணத்தினால் 4 சதவீதமும், கிழக்கு மாகாணத்தினால் 6 சதவீதமும் அளவிலான, குறைந்த பங்களிப்பே வழங்கப்படுகின்றது.

வடக்கு, கிழக்கு மக்களுக்காக, 50,000 வீடுகளை நிர்மாணிக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் 25,000 வீடுகளின் நிர்மாணப் பணிகளை, எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்தில் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதுடன், மேலும் 10,000 வீடுகளின் நிர்மாணப் பணிகள், 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளன.

இரு மாகாணங்களிலும் 1,847 கிலோமீற்றர் அளவிலான பாதை அபிவிருத்தி செய்யப்படவுள்ளதுடன், மயிலிட்டி, மீன்பிடித்துறைமுகத்தின் அபிவிருத்தி பணிகளையும் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.