வடக்கு, கிழக்கு இணைந்தே இருக்க வேண்டும்: கருணா

“வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைந்தே இருக்க வேண்டும். முஸ்லிம் மக்கள் இதை எதிர்த்தால், ஆதரவைப் பெற்றுத்தருமாறு, முஸ்லிம் தலைமைகளிடம் கோரிக்கை விடுக்கவேண்டும்” என, தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான வி.முரளீதரன்(கருணா அம்மான்) தெரிவித்தார்.

தமிழர் ஐக்கிய சுதந்தி முன்னணியின் ஊடகவியலாளர் மாநாடு, கல்லடியிலுள்ள கட்சியின் தலைமையகத்தில் இன்று (07) நண்பகல் நடைபெற்றது. அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர் கூறியதாவது, “வடக்கு, கிழக்கு இணைந்து இருக்க வேண்டும் என்பது புதிய கருத்தல்ல. அது தந்தை செல்வாவின் கூற்றாகும். இதனை யாரும் மாற்ற முடியாது.

“மாகாண சபை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்ததன் ஊடாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் சம்பந்தன் ஐயாவும் தமிழர்களைக் காட்டிக்கொதுத்துவிட்டனர். முஸ்லிம் தலைமைகளும் அவ்வாறுதான் செய்தன. அதை ஏன் செய்தார்கள் என்பது நமக்குத் தெரியாது.

“எங்களுடைய கட்சி, வடக்கு – கிழக்கு மாகாணங்கள் இணைய வேண்டுமென்ற கருத்தையே கொண்டுள்ளது” என்றார். தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் செயலாளர் நாயகம் வீ.கமலதாஸ், முன்னாள் மாகாண அமைச்சர் கே.நவரட்ணராஜா உட்பட பலர் இதில் கலந்துகொண்டனர்.