வடமாகாண சபையினருக்குக் கருத்தரங்கு

அரசாங்கம், புதியதொரு அரசியலமைப்பை உருவாக்கும் முயற்சியிலிருக்கும்போது, சுவிட்சர்லாந்து மற்றும் தென்னாபிரிக்கா ஆகிய நாடுகளின் அரசியலமைப்பு அணியொன்று, வடமாகாணசபை உறுப்பினர்களுக்கு, கருத்தரங்கொன்றை, அடுத்த திங்கட்கிழமை நடத்தவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பேராசிரியர் நவரத்ன பண்டார தலைமையிலான அரசியலமைப்புக் கற்கை நிறுவனமும், சுவிட்ஸர்லாந்தின் பிறிபோக் பல்கலைக்கழகமும் இணைந்து இந்தக் கருத்தரங்கை நடத்தவுள்ளன.

இந்தக் கருத்தரங்கில், சுவிட்ஸர்லாந்து மற்றும் தென்னாபிரிக்க பல்கலைக்கழகங்களின் அரசியற்றுறைப் பேராசிரியர்கள் பங்குபெறுவர். ‘அதிகாரப்பகிர்வு, அரசியலமைப்பு மாதிரிகள், பல்லின சமூகங்களில் சவால்கள் மற்றும் பார்வைகள்’ என்பது இந்தக் கருத்தரங்கின் கருப்பொருளாகும். இந்தக் கருத்தரங்கில் பங்குபற்றுமாறு தனக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கூறியுள்ளார்.