விடுதலைப்புலி: கலையழகனின் மனைவிக்கு அழைப்பு

கிளிநொச்சி விநாயகபுரத்தில் வசித்து வரும் வடபோர்முனையின் கட்டளைத்தளபதியாக இருந்து மரணமடைந்த லெப்டினன்ட் கேணல் கலையழகனின் மனைவிக்கு, கொழும்பு பயங்கரவாத தடுப்பு பிரிவினர் அழைப்பானை விடுத்துள்ளனர். வட போர்முனையின் கட்டளைத் தளபதிகளில் ஒருவராக இருந்து மரணமடைந்த கெங்காதரன் எனும் லெப்டினன்ட் கேணல் கலையழகனின் மனைவி விடுதலைப்புலிகள் அமைப்பில் ஏழு வருடங்கள் இருந்ததாகவும், கலையழகன் பயன்படுத்திய கைத்துபாக்கியை தற்போதும் வைத்திருப்பதாகவும், புலம்பெயர் தமிழர்களுடன் தொடர்புகளை பேணுவதாகவும், வெளிநாடுகளில் இருந்து அதிகளவான உதவியை பெற்றுக்கொள்வதாகவும் கூறி பல தடவைகள் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் விசாரித்துள்ளனர்.

இந்தநிலையில், நேற்று திங்கட்கிழமை(12) அவரது விநாயகபுரம் வீட்டுக்குச் சென்ற பயங்கரவாத தடுப்பு பிரிவினர் நாளை மறுதினம் (15) கொழும்பு இரண்டாம் மாடிக்கு வாக்கு மூலம் அளிப்பதற்காக வருமாறு அழைத்துள்ளனர்.

தரம் ஏழு மற்றும் தரம் இரண்டில் கல்வி கற்கும் இரண்டு மகன்களுடன் வசித்து வரும் கலையழகனின் மனைவி, சுமார் எட்டு வருடங்களுக்கு மேலாக புலிகள் அமைப்பின் பொருண்மிய மேம்பாட்டு நிறுவனத்தில் மாதாந்த சம்பளம் பெறும் ஊழியராக பணிபுரிந்துள்ளார்.

அதற்கான சாட்சிகளாக அவரோடு பணியாற்றிய பலர், இன்றும் கிளிநொச்சியில் உள்ளனர். இந்த நிலையில் தன்னிடம் மேற்கொள்ளப்படும் விசாரணைகள் பெரும் அச்சமடைய செய்துள்ளதாக கலையழகனின் மனைவி தெரிவித்துள்ளார்.