விஸ்தீரணம் பெறும் பலாலி விமான நிலையம்

வடக்கு மாகாணத்தின் பிரதான விமான நிலையமான பலாலி விமானநிலையத்தை, பிராந்திய விமான நிலையமாக விஸ்தரிப்பதற்கு, இலங்கை – இந்திய பிரதானிகளிடையே இணக்கம் ஏற்பட்டுள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் நேற்று (22) இடம்பெற்ற இருநாட்டு உயர்மட்டச் சந்திப்புத் தொடர்பில், கூறுகையிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தரன்ஜித் சிங் சந்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் முப்படையைச் சேர்ந்தோருக்கு இடையிலான முக்கிய சந்திப்பொன்றே, நேற்று இடம்பெற்றிருந்தது.

இச்சந்திப்புத் தொடர்பில் தொடர்ந்து கூறிய நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், பலாலி விமானநிலையத்தைப் பிராந்திய விமான நிலையமாக விஸ்தரிப்பதற்கு, இந்திய அரசாங்கம் இணக்கம் தெரிவித்திருப்பதாகவும் அதற்கிணங்க, இந்தியாவினுடைய நிபுணர் குழுவொன்று, உடனடியாக பலாலி விமானநிலையம் தொடர்பில் ஆராய்வதற்கு வரவுள்ளதென்றும் கூறியதோடு, அந்த நிபுணர்குழுவுடன் இலங்கைச் சிவில் விமானசேவை தொழில்நுட்பவியலாளர்களும் இணைந்து பணியாற்றுவரென்று கூறினார்.

பலாலி விமான நிலையத்துக்கென ஒதுக்கப்பட்டுள்ள நிலப்பரப்பிலேயே, முழுமையான விஸ்தரிப்புப் பணிகள் இடம்பெறவுள்ளன எனத் தெரிவித்த அவர், விஸ்தரிப்புப் பணிகளுக்கு முன்பாக, இவ்வருட இறுதிக்குள் இந்தியாவிலிருந்து முதலாவது சர்வதேச விமானத்தை, பலாலியில் தரையிறக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட உள்ளதாகவும், சர்வதேச விமானத்தின் வருகையை உறுதிப்படுத்துவதற்கான தொலைத்தொடர்புச் சாதனங்களை பொருத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென்றும், அதற்கான பணிகள் யாவும் மிக விரைவில் ஆரம்பிக்கவுள்ளனவெனவும் குறிப்பிட்டார்.

இந்திய விமானச் சேவையை, உடனடியாக ஆரம்பிப்பதே திட்டமென்றும், இது, இவ்வருட இறுதிக்குள் சாத்தியமாகுமென்றும் கூறிய சுமந்திரன் எம்.பி, விமானப் போக்குவரத்து நடைபெறும்போதே, பலாலி விமான நிலைய ஓடுபாதைகள் மற்றும் விஸ்தரிப்புப் பணிகள் இடம்பெறுமென்றும், இந்த விமான நிலைய விஸ்தரிப்பினூடாக, பலருக்கான தொழில்வாய்ப்புகள் உறுதிப்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

“பலாலி விமான நிலையத்தை விஸ்தரிப்பதன் அவசியம் பற்றி, இந்திய அரசாங்கம் அடிக்கடி தனது நிலைப்பாட்டைத் தெரிவித்து வந்திருந்தது. கடந்த இரண்டு வருடங்களாக, இதற்கான நகர்வுகளை மும்முரமாக மேற்கொண்டு வந்தனர். திருச்சி, சென்னை விமான நிலையங்களிலிருந்து, முதற்கட்டமாக, பலாலிக்கான விமானச் சேவைகளை ஆரம்பிக்கவுள்ளனவெனத் தெரியவருகிறது” என, அவர் மேலும் கூறினார்.