வெனிசுலாவின் இடைக்கால ஜனாதிபதிக்கு ட்ரம்ப் எச்சரிக்கை

வெனிசுலா ஜனாதிபதி நிகோலஸ் மதுரோவையும் அவரது மனைவியையும் அவரது நாட்டுக்கே சென்று கடந்த சனிக் கிழமை கைது செய்த அமெரிக்க பாதுகாப்புப் படை, அவர்கள் இருவரையும் நியூயோர்க் மாகாணத்தில் உள்ள புரூக்ளின் சிறையில் அடைத்துள்ளது.

அவரது கைதுக்கு வெனிசுலா துணை ஜனாதிபதி டெல்சி ராட்ரிக்ஸ் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். வெனிசுலாவின் ஒரே ஜனாதிபதி நிகோலஸ் மதுரோதான் என்றும், அவரை அமெரிக்கா உடனடியாக விடுவிக்க வேண்டும் எனவும் கடுமையான வார்த்தைகளில் கூறி இருந்தார்.

வெனிசுலா நாட்டின் இடைக்கால ஜனாதிபதியாக பொறுப்பேற்குமாறு துணை ஜனாதிபதி டெல்சி ராட்ரிக்ஸுக்கு அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், வெனிசுலா இடைக்கால ஜனாதிபதி டெல்சி ராட்ரிக்ஸுக்கு கடும் எச்சரிக்கையை விடுத்தார். அவர் சரியானதைச் செய்யத் தவறினால், பெரிய விலையை அவர் கொடுக்க நேரிடும். நியூயார்க் சிறையில் இருக்கும் நிகோலஸ் மதுரோவைவிட அது பெரிய விலையாக இருக்கும்  என ட்ரம்ப் எச்சரித்தார்.

வெனிசுலாவின் எதிர்காலம் குறித்த கேள்விக்கு பதில் அளித்த ட்ரம்ப்,  அங்கு மறுகட்டமைப்பு செய்வது, ஆட்சி மாற்றம் செய்வது இப்படி நீங்கள் எதை வேண்டுமானாலும் அழைக்கலாம். அது இப்போது இருப்பதைவிட சிறந்ததாக இருக்கும். இதைவிட மோசமாக எதுவும் ஆகிவிடாது என கூறினார்.

மேலும் அவர், ‘அமெரிக்காவின் தலையீட்டுக்கு உள்ளாகும் கடைசி நாடு வெனிசுலா எனச் சொல்ல மாட்டேன். டென்மார்க்கின் ஒரு பகுதியாக இருக்கும் அந்த பெரிய தீவு (கிரீன்லாண்ட்) நிச்சயமாக எங்களுக்குத் தேவை. அந்த தீவை தற்போது ரஷ்ய மற்றம் சீன கப்பல்கள் சூழ்ந்துள்ளன எனத் தெரிவித்தார்.