முக்தாஹான் மாகாணத்தில் உள்ள கோவிலில் இருந்து உபோன் ரட்சதாணி (Ubon Ratchathani) மாகாணத்தில் உள்ள மற்றொரு கோவிலுக்கு, 34 பிக்குகள் மற்றும் 5 பொதுமக்கள் யாத்திரை மேற்கொண்டிருந்தனர்.
இந்தக் குழுவின் மீது, 11 வயது சிறுவன் ஓட்டிவந்த பிக்கப் வாகனம் மோதியதில் 5 பிக்குகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்; காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் மேலும் 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
இந்த விபத்தில் மொத்தம் 22 பிக்குகள் மற்றும் ஒரு பொதுமக்கள் காயமடைந்துள்ளதாகவும், அவர்களில் 4 பேர் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் முக்தாஹான் மாகாண ஆளுநர் வோராயன் புனாரத் தெரிவித்துள்ளார்.
சிறப்புத் தேவைகள் கொண்ட அந்த 11 வயது சிறுவன், தனது வீட்டின் உரிமையாளருக்குத் தெரியாமல் கெப் வாகனத்தை எடுத்துக்கொண்டு சுமார் 10 கிலோமீட்டர் தூரம் ஓட்டி வந்த நிலையிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக முக்தாஹான் மாகாண காவல்துறைத் தலைவர் மேஜர் ஜெனரல் பைரோஜ் தைபுத்ரா தெரிவித்துள்ளார்.
சிறுவன் கடும் அதிர்ச்சியில் இருப்பதால் அவரிடம் இன்னும் விசாரணை நடத்தப்படவில்லை என்றும், விபத்து குறித்த மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெறுவதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக இதுவரை எவ்விதக் குற்றச்சாட்டுகளும் பதிவு செய்யப்படவில்லை என்று காவல்துறைத் தலைவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.