180 பேருடன் சென்ற உக்ரைன் விமானம் விழுந்து நொறுங்கியது

ஈரானில் இருந்து நேற்று (08) இரவு புறப்பட்ட போயிங் 737 ரகத்தை சேர்ந்த அந்த விமானம் சிறிது நேரத்திலேயே கீழே விழுந்து நொறுங்கியது.

தொழில்நுட்ப காரணங்களால் விமானம் விபத்தில் சிக்கியதா அல்லது தாக்கப்பட்டதா? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

விமானத்தில் பயணம் செய்தவர்களின் நிலை பற்றி உடனடியாக எந்த தகவலும் வெளியாகவில்லை.

ஈரானின் 52 இடங்களில் தாக்குதல் நடத்துவோம் என அமெரிக்கா தெரிவித்ததற்கு பதிலடியாக 290 என்ற எண்ணை அமெரிக்கா நினைவில் கொள்ள வேண்டும் என ஈரான் ஜனாதிபதி ஹசன் ரவுகானி தெரிவித்தார்.

1988ம் ஆண்டு ஜூலை மாதம் வளைகுடா பகுதியில் சென்று கொண்டிருந்த ஈரானிய விமானம் (ஈரான் ஏர் 655) அமெரிக்க போர்க்கப்பலால் சுட்டு வீழ்த்தப்பட்டது.

இதில் 66 குழந்தைகள் உள்பட 290 பேர் கொல்லப்பட்டனர். இதை குறித்தே தற்போது 290 என்ற எண்ணை அமெரிக்கா நினைவில் கொள்ள வேண்டும் என ஹசன் ரவுகானி கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

ஹசன் ரவுகானி கூறியதை அடுத்து இந்த விமான விபத்து சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.