4 கட்சிகள் இணைவு

ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியுடன் மேலும் 4 கட்சிகள் இணைந்துள்ளன. இதன்பிரகாரம், முன்னாள் பிரதி அமைச்சரான கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தலைமையின் கீழ் இயங்கும் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியும் இதில் அடங்கும்.

ஜே.வி.பியின் முன்னாள் தலைவர் சோமவன்ச அமரசிங்கவின், மக்கள் தொழிலாளர் கட்சி, ஸ்ரீ லங்கா முற்போக்கு முன்னணி மற்றும் ஸ்ரீ லங்கா லிபரல் கட்சி ஆகிய கட்சித் தலைவர்கள், நேற்று (18), முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவைச் சந்தித்து, பொதுஜன முன்னணியில் இணைந்து செயற்பட விருப்பம் தெரிவித்துள்ளனர்.

நேற்று முன்தினம் மற்றும் நேற்றைய தினங்களில், இந்தக் கட்சிகளின் பிரதிநிதிகள் கொழும்பு நெலும் மாவத்தையில் அமைந்துள்ள ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் அலுவலகத்தில் பசில் ராஜபக்‌ஷவைச் சந்தித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை , மலையக தேசிய முன்னணி எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியுடன் இணைந்து போட்டியிட விரும்பம் தெரிவித்திருந்தது.

கடந்த ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தலில் மலையக தேசிய முன்னணி தற்போதைய அரசாங்கம் வெற்றி பெற உழைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.