6,176 இலங்கையர் கைது

“சட்ட விரோதமான முறையில், கடல் வழியாக வெளிநாடுகளுக்குச் செல்லும் நபர்களைத் தடுப்பதற்காகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் நிறுவப்பட்டுள்ள பிரிவினால், கடந்த ஐந்து வருடத்தில் 6,176 இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்” என,

சட்டமும் ஒழுங்கும் மற்றும் தென் அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்னாயக்க தெரிவித்தார். அத்துடன், கடந்த ஐந்து வருட காலத்துக்குள் கடல் வழியாக சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு செல்ல முற்பட்டு, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் சமுத்திரப் பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ள இலங்கைப் பிரஜைகளை வெகு விரைவில் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

நாடாளுமன்றில் நேற்று (05) இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தில், வாசுதேவ நாணயக்கார எம்.பி எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இதனைக் கூறினார்.

அங்கு அவர் தொடர்ந்து பதிலளிக்கையில், “கைது செய்யப்பட்டுள்ள இலங்கையர் சம்பந்தமான விசாரணைகளைத் துரிதமாகப் பூர்த்தி செய்து, அவர்களை அழைத்துவருவதற்கு பெரும் தொகைப் பிணைத் தொகை தேவைப்படுகிறது.

பிணை பெறுவதற்காக மேல் நீதிமன்றத்துக்கு பிணைக் கோரிக்கை சமர்ப்பிக்காதமையால் சுமார் 18 மாதமாக தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள இரண்டு சந்தேக நபர்கள் மாத்திரம் உள்ளனர்.

அத்துடன்,கடந்த 3 மாத காலப்பகுதியில் கைது செய்யப்பட்டு, பிணை விண்ணப்பங்களை சமர்ப்பிக்காமை, பிணை விண்ணப்பங்களைச் மேல் நீதிமன்றம் நிராகரித்தமை அல்லது அது பற்றி விசாரணை செய்ய நாள் ஒதுக்கியமை காரணமாக, 20 சந்தேக நபர்கள் மட்டுமே தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சட்டவிரோதமாக கடல் வழியாக வெளிநாடு செல்வதுடன் தொடர்புடைய 544 விசாரணைகளில் 246 விசாரணைகள் பூர்த்தி செய்து, 74 விசாரணைகள் தொடர்பில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அந்த விசாரணைகளில் 172 விசாரணைகள் தொடர்பாக சட்டமா அதிபரின் ஆலோசனை கிடைக்க வேண்டியுள்ளதுடன், 126 விசாரணைகளை துரிதமாக பூர்த்தி செய்து சந்தேக நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.