மதங்களும்…..! மனிதர்களும்…..!!

(வரதன் கிருஷ்ணா உடன் சாகரன் இணைந்து)

நான் உலகில் பல நாடுகளுக்கு போய் இருக்கிறேன் அதற்காக நான் பணக்கார குடும்பத்தில் பிறந்தவன் அல்ல இன்றும் எனது தயார் உட்பட எனது குடும்ப உறவுகள் அந்த தேயிலை தோட்டத்தில்தான் வாழ்கிறார்கள். நான் நாடு கடந்து பயணித்த அனைத்து பயணங்களுக்கும் உதவியவர்கள் நான் நட்பு கொண்டு உறவாடிய தோழர்களின் நட்புதான் அது மலையகத்தை கடந்து வடக்கு கிழக்கு என பறந்து விரிந்து கிடக்கிறது.


சொல்ல வந்தவிடயம் என்னவெனில் இப்படியான ஒரு பயணத்தில் எனது கடவுச்சீட்டு உட்பட எல்லாவற்றையும் ஆசிய நாடொன்றில் என்னோடு நட்பு கொண்ட நம்மவர் எடுத்துக்கொண்டு ஓடிவிட்டார்.

எதற்கும் வழியில்லாது நான் நடு ரோட்டுக்கு வந்தேன், உண்ண வழியில்லை உறங்க இடமில்லை இறுதியில் ஒரு சீக்கிய ஆலயத்தில் சரணடைந்தேன், மூன்று நேர உணவு கிடைத்தது, படுக்க இடமும் கிடைத்தது நான் வாயை சும்மா வைத்துக்கொள்ள முடியாத ஆள் என்பதால் என்னிடம் கடவுச்சீட்டு இல்லை என்பதை ஒருவரிடம் சொன்னேன் இதை அறிந்த அந்த ஆலயத்தின் உயர் குரு வந்து சொன்னார் மூன்று நேரமும் வந்து சாப்பிடுங்கள் இந்த கோவிலின் ஒரு மூலையில் தூங்குங்கள் ஆனால் இரவில் இங்கு தங்குவதை தவிருங்கள் என்றார், நான் அன்று முதல் ஒரு மாதம் அந்த நாட்டில் உள்ள ஒரு மயானத்தில் சுமார் ஒரு மாதம் தனிமையில் படுத்து உறங்கினேன்.

ஆனால் அங்கு நான் பேய்களையும் பிசாசுகளையும் காணவே இல்லை, வேறொரு நாட்டு கல்லறையில் நிம்மதியாக நித்திரை கொண்டேன்.

பின்னர் அங்கிருந்து வெளியேறுவதற்கு உதவியவர்களும் அந்த சீக்கியர்கள்தான், பின்னர் நான் சென்ற நாடுகளில் எல்லாம் இந்த சீக்கியர்களின் ஆலயங்களை ஒரு சுற்று சுற்றி பார்த்திருக்கிறேன் பசித்த அனைவருக்கும் உணவு வழங்கும் ஒரு மனிதம் அவர்களிடம் ஜாதி மதம் கடந்து உலகில் அவர்கள் வாழும் எல்லா தேசங்களிலும் இன்றும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

அவர்கள் யாரையும் மத மாற்றம் செய்ய ஒருபோதும் விரும்பியவர்கள் இல்லை, இவர்களை போன்றே யூதர்களும் தமது மதத்துக்குள் வேற்று மதத்தினரை சேர்த்துக் கொள்வதில்லை.

நான் மதங்களில் நம்பிக்கை இல்லாதவன்தான் ஆனால் இந்த மனங்களிடத்தும் மனித நேயத்திடமும் எனக்கு ஈர்ப்பு உண்டு தவிர்க்க முடியாமல் எங்கள் கலாச்சாரத்துடன் அடையாளத்துடன் இந்த மதமும் இணைந்துவிட்டது மனிதர்களை கூறுபோடாதவரைக்கும் இதனை நான் வெறுக்கவில்லை மக்களை அறிவூட்டி விழித்தெழச்செய்யவே விரும்புகின்றேன் உங்ளக்ள பதிவு எமக்கு சில சமூக நியமங்களை சொல்லியே செல்கின்றது அந்த வகையில் பாராட்டுக்கள். (Saakaran)