நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தை மீறிய 38 பேருக்கு அபராதம்

மாவட்ட  அரசாங்க  அதிபர்  சிந்தக்க  அபேவிக்கிரமவின்  ஆலோசனைக்கமைய  கல்முனை, அக்கரைப்பற்று,  சம்மாந்துறை,  பொத்துவில்,  அம்பாறை,  தெஹியத்தக்கண்டி  ஆகிய  நீதிமன்றங்களின்  நியாயாதிக்கத்திற்குட்பட்ட  பிரதேசங்களில்  பாவனையாளர்  அலுவல்கள் அதிகார சபையின்  புலனாய்வு  உத்தியோகத்தர்கள்  தொடர்ச்சியாக  மேற்கொண்ட  திடீர்  சுற்றிவளைப்புகளில்  நுகர்வோர்  பாதுகாப்புச்  சட்டத்தை  மீறி  வியாபார  நடவடிக்கைகளில்  ஈடுபட்ட 91 வர்த்தகர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் 38   வர்த்தகர்களுக்கு எதிராக நீதிமன்றங்களில் வழக்கு  தாக்கல்  செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.    

அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட  விலையை  விட  கூடுதலான  விலைக்கு  அத்தியாவசிய பொருட்களை  விற்பனை  செய்தமை,  நுகர்வோர்  நலன்  கருதி  வர்த்தக  நிலையங்களில் விலைப்பட்டியலை  காட்சிப்படுத்தாமை,  நுகர்வுக்கு  பொருத்தமில்லாத  பொருட்களை காட்சிப்படுத்தியமை,  காலவதியான  பொருட்கள்  மற்றும்  தரமற்ற  பொருட்களை  விற்பனை  செய்தமை  போன்ற  நடவடிக்கைகளில்  ஈடுபட்ட  வர்த்தகர்கள்  சுற்றிவளைப்பின்  போது  கண்டு பிடிக்கப்பட்டு  வர்த்தக  நிலையங்களின்  உரிமையாளர்களுக்கு  எதிராக  நீதிமன்றில்  வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மேலும் அத்தியாவசிய  பொருட்களை  கூடுதலான விலைக்கு  விற்பனை  செய்யும்  வர்த்தகர்கள்  தொடர்பாக  பொது  மக்கள்  1977ம்  இலக்கத்திற்கு  அல்லது  மாவட்ட  நுகர்வோர்  அதிகார  சபையின்  0632222355 என்னும்    தொலைபேசி  இலக்கத்திற்கு தகவல்களை  வழங்குமாறு  அறிவிக்கப்பட்டுள்ளது.