முதல் கொரோனா தடுப்பூசி காப்புரிமை வழங்கிய சீனா

சீனாவின் ஊஹான் மாகாணத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கிய கொரோனா வைரஸ் பரவல், இன்று உலகத்தையே ஆட்டி வைத்துக் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில்தான் உலகம் முழுதும் கொரோனா வைரஸுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் பல்வேறு முயற்சிகள் நடந்துகொண்டிருக்கின்றன.

அதன் ஒரு பகுதியாக சீனாவின் தடுப்பூசிகள் தயாரிப்பதில் புகழ் பெற்ற நிறுவனமான கான்சினோ பயாலஜிக்ஸ் இன்க் நிறுவனத்துக்கு கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் அங்கீகாரத்தை சீன அரசு கொடுத்திருக்கிறது.

சீன அரசால் கொரோனா வைரஸ் தடுப்பூசிக்காக முதலில் அளிக்கப்படும் காப்புரிமை இதுதான் என்று ஓகஸ்டு 16 ஆம் திகதி வெளியான அந்த பத்திரிகை செய்தியில் கூறப்பட்டுள்ளது.

ஓகஸ்ட் 11 ம் திகதி இந்தக் காப்புரிமை வழங்கப்பட்டதாக சீனாவின் தேசிய அறிவுசார் சொத்து நிர்வாகம் வெளியிட்ட ஆவணங்களை மேற்கோள் காட்டி செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

அதே 11 ஆம் திகதிதான் ரஷ்ய ஜனாதிபதி புடின் கொரோனா வைரஸுக்கு எதிரான ரஷ்யாவின் தடுப்பூசி, ஸ்புட்னிக் வி பற்றிய அறிவிப்பை வெளியிட்டார் என்பது குறிப்பிடத் தக்கது.

கொரோனா தடுப்பூசிக்கான சீனாவின் அதிகார பூர்வ காப்புரிமையை பெற்றதால் கன்சினோ நிறுவனத்தின் பங்குகள் வேகவேகமாக உயர ஆரம்பித்துள்ளன.