யார் இந்த கௌரி லங்கேஷ்?

லங்கேஷ் என்ற கன்னட வார இதழ் கர்நாடக அரசியல் சமூக வட்டாரங்களில் மிகப் பிரபலமானது. கௌரியின் தந்தையான லங்கேஷ்தான் இந்த இதழைத் தொடங்கினார். அவர் 2000 ஆண்டு மறைந்த பின் கௌரி இந்த இதழுக்கு ஆசிரியர் பொறுப்பேற்று நடத்தி வருகிறார். இப்போது அவருக்கு வயது 55. கர்நாடகத்தில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி, மதம், ஜாதி என்று எந்த பாகுபாடும் இல்லாமல் அநியாயம் செய்பவர்கள் பலரைத் தோலுரித்துக் காட்டியிருக்கிறது லங்கேஷ் பத்திரிகை. இப்போதைய காங்கிரஸ் அரசின் அமைச்சர்கள் பற்றி நிறைய எழுதியிருக்கிறார் கௌரி. லங்கேஷ் பத்திரிகைக்கு என்றே தனிப்பட்ட வாசகர் கூட்டம் உண்டு. ஒவ்வொரு செய்தியும் தீப்பிடிக்கும். யாரோடும் சமரசம் செய்துகொண்டால் மக்கள் நன்மைக்காக எழுத முடியாது என்பதால், இதுவரை எவ்வித வணிக விளம்பரமும் இல்லாமலேயே பத்திரிகையை நடத்தி வந்தார் கௌரி லங்கேஷ்.

கடந்த 2016ஆம் வருடம் பாஜகவினர் தொடுத்த அவதூறு வழக்கில் குற்றவாளி என்று ஹூப்ளி மாவட்ட நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டார் கௌரி லங்கேஷ். ஆனால், அந்த வழக்கில் முன் ஜாமீன் பெற்றதால் தண்டிக்கப்பட்டாலும் உடனடியாக விடுதலை ஆகிவிட்டார் கௌரி லங்கேஷ்.

2008ஆம் ஆண்டு தர்வாத் தொகுதி பாஜக எம்.பியான பிரகலாத் ஜோஷி, பாஜகவைச் சேர்ந்த உமேஷ் டூஷி ஆகியோரைப் பற்றி லங்கேஷ் இதழில் செய்தி வெளியானது. அவர்கள் இருவரும் லங்கேஷ் ஆசிரியர் மீது அவதூறு வழக்குத் தொடுத்தார்கள். இந்த வழக்கில் அந்தக் கட்டுரை எழுதிய நிருபர் முதல் குற்றவாளி, ஆசிரியர் கௌரி இரண்டாம் குற்றவாளி. இவ்வழக்கில் கடந்த வருடம் அக்டோபர் மாதம் தீர்ப்பளிக்கப்பட்டது. முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்ட நிருபரை விடுதலை செய்துவிட்டு, இரண்டாம் குற்றவாளியான கௌரிக்கு ஆறு மாதங்கள் சிறை தண்டனையும், பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்தது ஹூப்ளி நீதிமன்றம். ஆனால், அன்றே அவர் பிணையில் விடுதலையானார்.

இதுபற்றி அப்போது பத்திரிகையாளர்களிடம் பேசிய கௌரி லங்கேஷ், “என்னை சிறையில் தள்ளலாம் என்று பலரும் மனப்பால் குடித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களை நான் ஏமாற்றிவிட்டேன். ஹூப்ளி நீதிபதி அவர்கள் தனக்கு இருக்கும் அனைத்து அறிவையும் பயன்படுத்தி நான் குற்றவாளி என்று கண்டறிந்துள்ளார். இது எனக்குத் தற்காலிகமான பின்னடைவுதான். நான் உயர்நீதிமன்றத்தில் சந்திப்பேன்” என்று குறிப்பிட்டார்.

கௌரி லங்கேஷ் கன்னட அரசியல் உலகத்தில் ஆண்ட்டி பிஜேபி, ஆண்ட்டி மோடி என்று பாஜகவினரால் பகிரங்கமாக முத்திரை குத்தப்பட்டவர். இவர் கடந்த ஆண்டு ஹூப்ளி கோர்ட்டால் அவதூறு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டபோது கர்நாடக மாநில பாஜக ஐ.டி. செல் தலைவர் அமித் மாளவியா தனது ட்விட்டரில், ‘இன்று பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் தண்டிக்கப்பட்டிருக்கிறார். மற்ற பத்திரிகையாளர்கள் இதைக் கவனத்தில் கொள்வார்கள் என்று நம்புவோம்’ என்று குறிப்பிட்டிருந்தார்.

அப்போது இதுபற்றி கருத்து தெரிவித்த கௌரி லங்கேஷ், ‘பாஜகவின் பேச்சைக் கேட்கவில்லை என்றால், பாஜகவின் தத்துவத்துக்குத் தலையாட்டவில்லை என்றால் இதுதான் கதி என்று இடதுசாரி, முற்போக்கு, லிபரல் பத்திரிகையாளர்களை நேரடியாகவே மிரட்டுகிறார் அஜித் மாளவியா’ என்று குற்றம் சாட்டினார்.

மேலும் பாஜகவுக்கும், மத்திய அரசுக்கும் எதிரான விமர்சனங்களைத் தொடர்ந்து முன்னெடுத்து வந்தார் கௌரி. ‘மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தாலும் மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்திருப்பதால் கர்நாடகா முழுவதும் மதவாதமயப்படுத்துதல் நடக்கிறது’ என்று அடிக்கடி குற்றம்சாட்டி வந்தார் கௌரி லங்கேஷ்.

சமீபத்தில் ‘நாரதா நியூஸ்’ என்ற இணைய பத்திரிகைக்கு கௌரி லங்கேஷ் அளித்த பேட்டியைப் படித்தால் அவர் யாரால் கொல்லப்பட்டிருக்க முடியும் என்ற கேள்விக்கு ஓரளவுக்கு விடை காண முடிகிறது, அவரது பேட்டியின் ஒரு கேள்விக்கான பதில் மட்டும் இங்கே… நீங்கள் ஆண்ட்டி பிஜேபி, ஆண்ட்டி ஹிந்து, ஆண்ட்டி நரேந்திர மோடி என்றே பரவலாக அழைக்கப்படுகிறீர்கள். இதற்கான சரியான காரணம் என்ன?

இந்திய நாட்டின் ஒரு குடிமகளாக நான் பாஜகவின் பாசிச, மதவாத கொள்கைகளைக் கடுமையாக எதிர்க்கிறேன். ஹிந்து தர்மா என்ற பெயரில் சமூகத்தில் திணிக்கப்படும் சிந்தனைகளையும் நான் கடுமையாக எதிர்க்கிறேன். நான் ஹிந்து தர்மம் முன்னிறுத்தும் சாதியப் பாகுபாடுகளை எதிர்க்கிறேன். நான் எல்.கே.அத்வானியின் ரதயாத்திரையை எதிர்த்தேன், நரேந்திர மோடி ஆட்சியில் குஜராத்தில் நடந்த இனப்படுகொலையை எதிர்த்தேன். நமது அரசியல் அமைப்பு சாசனம் மதச்சார்பற்றவளாக இரு என்று எனக்கு போதிக்கிறது. அதன்படியே நடக்கிறேன்.

மதவாதிகளுக்கு எதிராகப் போராடுவது எனக்கு வழங்கப்பட்டிருக்கும் உரிமை. சாதிக் கொடுமைகளுக்கு எதிராகப் போராடிய சமூக அநீதிகளுக்கு எதிராகப் போராடிய சீர்திருத்தவாதி பசவாவைத் தந்த கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவள் நான். எனவே இப்படித்தான் இருப்பேன்.

அம்பேத்கர் எழுதி வைத்த அரசியல் அமைப்பு சாசனத்தின்படியான இந்திய குடிமகள். நான் ஜனநாயகத்தையும் கருத்துச் சுதந்திரத்தையும் நம்புகிறேன். நான் என்னால் முடிந்த அளவுக்கு மதவாச சக்திகளையும், கருத்துரிமைக்கு எதிரான சக்திகளையும் எதிர்த்துக்கொண்டுதான் இருப்பேன். என்னை ஆண்ட்டி மோடி, ஆண்ட்டி பிஜேபி என்று அழைப்பதை மக்கள் விரும்புகிறார்கள். ஏனென்றால் அதுநானே நான்” என்று அந்த பேட்டியில் உறுதியாகச் சொல்லியிருக்கிறார் கௌரி லங்கேஷ்.

இதே கர்நாடகாவில் 2015இல் முற்போக்குச் சிந்தனையாளர் கல்புர்கி சுட்டுக்கொல்லப்பட்டார். அதற்குள் இன்னொரு முற்போக்குச் சிந்தனையாளரும், பத்திரிகையாளருமான கௌரி லங்கேஷ் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார். இந்த ஒரு பேனா துப்பாக்கியால் சாய்க்கப்பட்டிருக்கலாம். ஆனால் இந்தியா முழுவதும் ஆயிரக்கணக்கான, லட்சக்கணக்கான பேனாக்கள் இதற்கு நீதி கேட்டு எழுந்திருக்கின்றன, எழும்.