சமாதானத்தை குழப்ப திலீபனை சாகடித்த பிரபாகரன்

 

அது இந்திய அமைதிபடை இலங்கையில் கால்பதித்த நேரம், சிங்கள தாக்குதலிலிருந்து தம்மை காக்க இந்தியா வந்ததை ஈழதமிழர்கள் கொண்டாடிகொண்டிருந்த நேரம், ஜெயவர்த்தனே இறங்கிவந்து தமிழருக்கு தனி மாகாணம் கொடுக்கலாம் என முதன்முதலாக சொல்லி இருந்த நேரம். அதற்கு மேலும் இழுத்தால் நிலமை இன்றைய சிரியா அளவிற்கு செல்லலாம் என்பதால் எல்லா குழுக்களும் இணக்கபாட்டுக்கு வந்திருந்த நேரம். புலிகளும் ராஜிவ் ஒப்புகொண்ட மாதாந்திர 50 லட்சத்தை வாங்கிகொண்டு எப்படியும் ஜெயவர்த்தனேவுக்கும் ராஜிவிற்கும் பிணக்கினை ஏற்படுத்தி மறுபடியும் சண்டை தொடங்கலாம் என எதிர்பார்த்த நேரம்.

ஆனால் ஜெயவர்த்தனேவோ அனுபவஸ்தர், இந்தியாவினை எதிர்க்கும் அளவிற்கெல்லாம் செல்லவே இல்லை. சீரழிந்த வடக்கு மாகாணத்தை சீர் படுத்ததொடங்கினார்

புலிகள் பொறுமை இழந்து மக்களை தூண்டிவிட ஆரம்பித்தனர், இந்திய முகாம்கள் முன்னால் ஈழமக்கள் ஆர்ப்பாட்டத்தில் இறங்கினர், பிண்ணணியில் புலிகள்

கொஞ்சம் கொஞ்சமாக இது அதிகரித்தது, இந்திய ராணுவம் முதலில் குழம்பினாலும் பின்னால் சுதாரித்தது, ஏதோ அவர்களுக்கு புரிந்தது. அன்று வரவேற்ற மக்களுக்கு இன்று என்ன ஆனது? ஏதோ துர்போதனை, நடக்கட்டும்

இந்திய இலங்கை ஒப்பந்தபடி வடக்கே சீரழிந்திருந்த நிர்வகத்தை ஜெயவர்த்தனே நடத்த தொடங்கினார். அதுவரை காவல் நிலையங்கள் இல்லை, அவர் திறக்கதொடங்கினார்

புலிகளுக்கு அழிவுக்கண் திறந்தது, காரணம் காவல்நிலையம் திறப்பது மக்களுக்கு சௌகர்யமோ இல்லையோ, தங்களுக்கு ஆபத்து என கருதினர். அவர்களை பொறுத்தவரை நீதி, காவல் எல்லாம் அவர்கள்தான், ஒரே நோக்கம் வசூல்

அந்நேரம் ஆங்காங்கே மக்கள் இந்தியாவினை எதிர்த்தாலும் பெரும் எதிர்ப்பு இல்லை. இந்தியாவினை மொத்த மக்களும் எதிர்க்க புலிகளுக்கு ஒரு காரணம் தேவைபட்டது, சில காரணங்களை உள்ளடக்கி திலிபன எனும் ராசையா பார்த்தீபனை உண்ணாவிரதம் என களமிறக்கினர்

காரணங்கள் இவைதான், புதிய காவல் நிலையம் திறக்க கூடாது, ஊர்க்காவல் படை கூடாது, எல்லாவற்றையும் நாங்கள் பார்த்துகொள்வோம், குறிப்பாக வடக்கு கிழக்கில் சிங்களன் வரவே கூடாது, இதனை ஏற்காதவரையில் உண்ணாவிரதம் தொடங்கும் என்றனர்.

இது சிக்கலான விஷயம், இந்தியபடை அமைதிகாக்க சென்றது, ஒருங்கிணைந்த ஈழமாகாணத்து தேர்தலை அமைதியாக நடத்த சென்றது, அங்கே நீதிமன்றம் கூடாது, காவல்நிலையம் கூடாது என்பது ஏற்றுகொள்ளகூடியது அல்ல, சட்டம் ஒழுங்கு வேண்டாமா?

கொழும்பில் ஏராளமான தமிழர்கள் வாழும்போது வடக்கே சிங்களர் நுழைய கூடாது என்பது எப்படி சாத்தியம்? அதுவும் வடக்கு கிழக்கு தமிழர்களின் தாயகம் என ஜெயவர்த்தனேவினை ஒப்புகொள்ளசெய்தபின் ஏன் தயக்கம் என ஏகபட்ட கருத்துக்கள் இந்தியாவிற்கு.

முதலில் உண்ணாவிரதித்தினை இந்தியா கண்டுகொள்ளவில்லை, காரணம் அப்படி தன்னை மிரட்டி தான் பணிந்தால் எடுத்தற்கெல்லாம் உண்ணாவிரதம் என கிளம்பிவிடுவார்கள் என்பது இந்தியாவிற்கு தெரியாததல்ல‌

இந்தியாவினை தன் விருப்பத்திற்கு மட்டும் ஆட்டுவிக்கும் விபரீத ஆயுதமாக புலிகள் திலீபனை பயன்படுத்துவதை இந்தியா உணர்ந்தது அமைதி காத்தது

ஆனால் புலிகள் ஈழமெங்கும் மக்களை அழைத்து திலீபனை காண செய்து கொடுங்கோல் இந்தியா எப்படி நம்மை சாகவிடுகின்றது பாரீர் என ஒப்பாரி வைத்தனர்.

மகாத்மா காந்தியும் உண்ணாவிரதம் இருந்தார், ஆனால் சுதந்திரம் கிடைக்கும்வரை இருந்து சாவேன் என அவர் இருக்கவில்லை. ஆனால் சில உரிமைகளை அவ்வப்போது பெற்றுகொடுக்கவும் தவறவில்லை

அந்த உயரிய தியாகத்திற்கும் வீண் பிடிவாததத்திற்கும் உள்ள வித்தியாசத்தை உணரா நாடல்ல இந்தியா, அது அப்படியே இருந்தது.

புலிகளும் திலீபன் செத்தே தீரவேண்டும் என முடிவோடே இருந்தனர், இல்லை என்றால் சாகப்போகும் அவன் தன்னை காப்பாற்றவேண்டாம் என எழுதிகொடுத்ததாக சொன்ன கடிதத்தை காட்டியே அவனுக்கு ஒரு சொட்டு நீர் கொடுக்காமல் வதைத்தனர்.

புலிகள் நினைத்திருந்தால் அவனை காப்பாற்றி இருக்கலாம், புலிதலைவர் சொன்னால் சயனைடு கடிக்கும் புலிகள், அவர் கட்டளை இட்டால் நீர் குடிக்கமாட்டார்களா?

அவர் காட்டிய பிடிவாதமே திலீபனை கொஞ்சம் கொஞ்சமாக கொன்றது, ஈழ மக்களிடையே இந்திய எதிர்ப்பு அதிகரித்தது.

இறுதியில் அவன் செத்துவிடுவான் என உறுதிசெய்யபட்ட நிலையில் இந்திய தரப்பு அணுகுமுறைகள் அவனை பாதுகாக்க வண்ணம் புலிகளும் ஆடினர், அதாவது தாமதபடுத்தினர். வெளியில் துடித்தனர், உள்ளுக்குள் கடும் திட்டம்

ஏற்றுகொள்ளமுடியாத கோரிக்கைகளுக்கு எப்படி செவிகொடுக்க முடியும் என இந்தியா யோசிக்க, வதைக்கபட்டு செத்தான் திலீபன்

அவன் செத்ததும் மொத்த ஈழதமிழரையும் இந்தியா கைவிட்டுவிட்டதாக ஒப்பாரி வைத்து, அவன் உடலை பெரும் பேரணியாக்கி ஒருவித பதற்ற நிலையினை உண்டாக்கினர் புலிகள்

அந்த நாள்தான் இதே செப்டம்பர் 26.

அதாவது மக்கள் போரினை மறந்து அமைதிவழிக்கு திரும்பிகொண்டிருந்தபொழுது, நிம்மதியாக பாதுகாப்பாக இருப்பதாக நினைத்து மகிழ்ந்தபொழுது, இனி போராளி குழுக்கள் வேண்டாம், இந்திய ராணுவம் எம்மை காக்கும் என் கொஞ்சம் கொஞ்சமாக புலிகளை மறக்க நினைத்தபொழுது

பெரும் சர்ச்சையாக திலீபனை சாகடித்து இந்திய ராணுவத்திற்கு எதிராக மக்களை திருப்பினர் புலிகள்.

ஆக எப்படியும் புலிகள் இந்தியாவுடன் மோதுவர், நாம் ஏன் அவசரபடவேண்டும் என்ற அனுபவஸ்த ஜெயவர்த்தனேவின் நிதானைம் வெற்றிபெற்ற வேளை அது.

அதன் பின் நடக்க கூடாதது எல்லாம் நடந்து, இன்று ஈழமக்களுக்கு ஒருங்கிணணைந்த மாநிலம் கூட இன்றி சிங்கள ராணுவ முற்றுகைக்குள்ளே வாழும்படி செய்தாகிவிட்டு அவர்களும் பரலோகம் சென்றாயிற்று

திலீபனும் புலிகள் அமைப்பின் உறுப்பினராக ஆடிய ஆட்டம் கொஞ்சமல்ல, போராளிகுழுக்கள் ஒழிப்பில் அவர் காட்டிய வெறியும், இன்னபிற அழிச்சாட்டிய கொடுமைகளும் பல இடங்களில் காண கிடக்கின்றன‌

புலிகளின் இரண்டாம் உண்ணாவிரதம் இது, முதல் உண்ணாவிரதம் சென்னையில் ராமசந்திரன் காலத்தில் நடந்தது. சார்க் மாநாட்டையொட்டி ஜெயவர்த்தனே இந்தியா வரும்பொழுது சென்னையில் இருந்த பிரபாகரனை நிராயுதபாணியாக்கி வீட்டு சிறையில் தள்ளினார் ராமச்சந்திரன்

அதாவது மத்திய அரசு சொல்லி, செயலில் இறங்கினார் அவர். செய்தது அந்நாளைய கமிஷனர் மோகன் தாஸ், பழி சுமந்ததும் அவரே

ஒன்றுமறியாத கன்னிபோல கவலையாய் விழித்துகொண்டிருந்தார் ராமசந்திரன், காரணம் அவரின் ஈழ இமேஜை காப்பாற்றும் நாடகம் அப்படி. அன்றெல்லாம் நெடுமாறன், வைகோ எல்லாம் ஏய் துரோகி ராஜினாமா செய் என்றெல்லாம் சொல்லவே இல்லை

மாநாடு முடிந்ததும் எச்சரிக்கையுடன் கருவிகளை பிரபாகரனிடம் கொடுத்தார் மோகன் தாஸ். ஒரே நாளில் உண்ணாவிரதத்தை முடித்துவிட்டு அடித்து புரண்டு இலங்கை ஓடிய பிரபாகரன அதன்பின் தமிழக பக்கம்வரவே இல்லை.

(பின்னாளில் பத்மநாபா, ராஜிவ் என எல்லா கொலைகளையும் தமிழகத்தில் செய்து தமிழகத்தை ஒரு கலவர பூமியாக்க புலிகள் எடுத்த முயற்சிக்கெல்லாம் உட்கோபம் அதுவேதான்.

ராமச்சந்திரன் அருமையாக நடித்த அரசியல் காட்சிகளில் இதுவும் ஒன்று.)

காரணம் உண்ணாவிரதம் என ஆரம்பித்து சென்னையில் ஒரு பதற்றத்தை அவர் தொடங்கினார், வீரமணி கும்பலின் ஜால்ரா ஒருபக்கம், புலிகளை பற்றிஅறியா தமிழக மக்களின் அப்பாவித்தனம் ஒருபக்கம் என மாநிலம் தடுமாறுவதை மோகன் தாஸ் விரும்பவில்லை

இன்னொன்று இலங்கை தீவிரவாதிகளுக்கு இடமளித்துவிட்டு பஞ்சாப், காஷ்மீர் என பாகிஸ்தானை எப்படி கண்டிக்கமுடியும் என்ற மோகன் தாஸின் பேட்டி பாராட்டதக்கது.

இதெல்லாம் ராமச்சந்திரனுக்கு தெரிந்துதான் நடந்தது, ஆனாலும் இன்றுவரை அவரை ஒருவார்த்தை யாரும் பேசமுடியாது ஜாதகம் அப்படி.

ஆக அன்று எப்படியும் தன்னை தமிழக மக்கள் காப்பாற்றுவார்கள் என உண்ணாவிரதம் தொடங்கிய பிரபாகரன், பின் நிச்சயம் இம்மும்றை சாகத்தான் வேண்டும் என்ற நிலையில் திலீபனை களம் இறக்கினார்.

ஏன் சாகவேண்டிய அந்த உண்ணாவிரதத்தை பிரபாகரன் இருந்தால் என்ன?

முன்பு சிங்கள பலகலைகழகத்திற்கெதிராக மாணவிகள் உண்ணாவிரதம் இருந்தபொழுது, இது எல்லாம் வேலைக்கு ஆகாது, வன்முறை ஒன்றே வழி என அம்மாணவியரை புலிகள் கடத்தினர். அவர்களில் ஒருவரை பிரபாகரன் திருமணமும் செய்தார்

அவர்தான் மதிவதனி,

அவருக்கு அன்று கொடுக்கபட்ட போதனை உண்ணாவிரதம் எல்லாம் சும்மா, தலைவர் பிரபாகரனை நம்பு

பின்பு திலீபனுக்கு கொடுக்கபட்ட கட்டளை, ஆயுத பலத்தால் இப்போது மக்களை திரட்டமுடியாது, உண்ணாவிரதம் இருந்து செத்துபோ, உணர்ச்சிகளை வைத்து பின் நாங்கள் பார்த்துகொள்கின்றோம்

அதாவது மதிவதனி இருந்தால் காப்பாற்றுவார்கள், திலீபன் இருந்தால் சாகும் வரை கிட்டே இருந்து கொல்வார்கள்.

அதன்பின் ஈழபிரச்சினை வேறுகோணத்தில் சென்று எல்லாம் நாசமாகிவிட்டது, எனினும் தங்களை மக்களிடம் மறுபடியும் கொண்டு சேர்ததற்காக யாழ்பாணத்தில் அவனுக்கொரு நினைவு தூண் புலிகளால் கட்டபட்டது

(இன்று அது சிதைக்கபட்டு அழிந்து கிடக்கின்றது, கண்டுகொள்ள யாருமில்லை)

தியாக தீபம் எனும் அடையாளம் காசி ஆனந்தனால் கொடுக்கபட்டது, பின் திலீபன் பெரும் அடையாளம் ஆனார்

ஏராளமான பேரினை கொன்றவர்கள் புலிகள், ஒருவனை உலகின் கண்முன் வதைத்து கொன்றனர் என்றால் அது திலீபனை மட்டுமே.

அவன் கடைசிவார்த்தை வரை பிரபாகரன் பின்னால் திரளுங்கள், ஈழத்தில் நமது கொடி நமது ராணுவம் என சொல்லியே செத்தான் என்றால் அவன் யாரால் தூண்டபட்டு, எதற்காக செத்தான் என்பது எளிதில் முடிவுக்கு வரகூடியது,

ஒரே காரணம் இந்திய ராணுவம் வெளியேற மக்கள் சண்டைக்கு வரவேண்டும்

அதன் பின்னும் ஈழமக்கள் அமைதிகாக்க, குமாரப்பா போன்றோர் இந்திய கைதுசெய்யபட்டனர், ஆனால் சயனைடு இல்லை. பின்னர் இலங்கை இந்திய அரசு பேசிகொண்டிருக்கும்பொழுது கைதிகளை சந்திக்க வந்த புலிகள் சயனைடை கொடுத்து சாக சொல்ல மறுபடி பற்றி எரிந்தது ஈழம்,

2009 வரை எரிந்தது.

எல்லாம் மிக நன்றாக நடந்துகொண்டிருந்த பொழுது திலீபனின் வதை சாவு எல்லாவாற்றையும் நாசமாக்கி மக்கள் உணர்ச்சிகள் மீண்டும் புலிகளால் அநியாயமாக தூண்டபட்டு எல்லாம் மண்ணாய் போக மிக முக்கிய காரணமாய் அமைந்துவிட்டது.

அனுபவஸ்த ஜெயவர்த்தனே நிதானமாக தன் எதிரிகளை மோதவிட்டு ரசிக்க தொடங்கினார், வரலாற்றின் பெரும் வில்லன் அவர்.

ஆனால் நிதானமிழந்த புலிகள் உதவவந்த இந்தியா மீதே பாய இன்று எல்லாம் சர்வநாசம்.

இன்றும் ஆங்காங்கே தீயாக தீபம், திலீபன், இந்திய கோரமுகம் என சிலர் தமிழகத்திலும் வீரவணக்கம் என இறங்கலாம், புரிந்தவர்களுக்கு புரியும் திலீபன் ஏன் சாகடிக்கபட்டான் என்பது

இந்தியாவிற்கு எதிராக அன்று ஏவபட்ட ஒரு தற்கொலை படை அவன்.

போகட்டும்

திலீபன் உண்ணாவிரதம் தொடங்கும்பொழுது பிரபாகரன் சொன்னாராம் “திலீபா நீ முன்னால் போ..நான் பின்னால் வருகிறேன்”

சொன்னபடி உடனே வந்தாரா? இல்லை. அவன் செத்ததும் அவனை வைத்து சீன் போட்டு என்னமோ செய்தார்

22 ஆண்டுகள் ஆடாத ஆட்டமெல்லாம் ஆடிவிட்டு தீலிபனுக்கு சொன்னபடி முள்ளிவாய்க்காலில் அவன் இருக்குமிடம் சென்றார்.

அவர் சென்றது பிரச்சினை இல்லை, மாறாக எத்தனை லட்சம் தமிழ்மக்களை கூட்டிகொண்டு சென்றுவிட்டார்.

அதுதான் மகா பரிதாபம், இந்த நூற்றாண்டின் பெரும் கொடுமைகளில் ஒன்று.

இப்படி எல்லோரையும் அனுப்பிவிட்டு இறுதியாக இவர் சென்றார், சரி இவருக்கு பின் போராட யாரை விட்டு சென்றார்? எதனை மிச்சம் வைத்துவிட்டு சென்றார்?

இதனைபற்றி எல்லாம் நாம் பேசகூடாது, இன்று தமிழகத்தில் அங்கிள் கோஷ்டியினர் இப்படியும் தொடங்கலாம்

“திலீபன் சாவுக்கு யார் காரணம் என் உறவே..?”

ராஜிவ்,கலைஞர், சோனியா, மன்மோகன்சிங் மற்றும் இந்தியா என சிலர் முழங்கிகொண்டிருப்பர்,

ஆனால் அமைதிபடை அனுப்பிய இந்திய தளபதி சுந்தர்ஜி (சுந்தர்.சி அல்ல) ஒரு தமிழர் என்பதை பற்றி யாரும் பேசமாட்டார்கள், இதுவும் ஓர் விந்தை. அவரை இனதுரோகி என யாராவது சொல்லி கேள்விபட்டிருக்கின்றீர்களா? கிடையவே கிடையாது.

ஆக இதனை தாண்டி யோசியுங்கள் திலீபனை சாக விட்டது யார் என தெரியும், யாரின் தலமைக்கு பணிந்து அவன் செத்தான் என்பதும் தெரியும், யாருக்கு லாபம் என்பதும் புரியும்

காஷ்மீரிய எல்லையில் செத்த எம் தேசவீரர்களை மறந்துவிட்டு, இப்படி எவன் சொல்லி எங்கோ அந்நிய நாட்டில் செத்தவனுக்காக இங்கு எவனாவது கொடிபிடித்தால் அவர்கள் எப்படிபட்டவர்கள் என நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்.

(நன்றி :: Stanley Rajan)