தோழர் றொபேட் புதிய அரசியல் பண்பாட்டின் முன் உதாரணம்

 

நோர்வே அரசின் மத்தியஸ்தத்துடன், இலங்கை அரசாங்கத்திற்கும் புலிகளுக்கும் இடையில் ஏற்;படுத்தப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையின் அடிப்படையில் சமாதானப் பேச்சுக்கள் முன்னெடுக்கப்பட்டுக்கொண்டிருந்த சமயத்தில் நோர்வே தலைமையிலான போர் நிறுத்த கண்காணிப்புக் குழு செயற்பட்டுக்கொண்டிருந்த காலப்பகுதியில் தோழர் றொபேட் புலிகளால் படுகொலை செய்யப்பட்டார். ஆயுதங்களை வைத்திருப்பதும், பாவிப்பதும் தவிர்க்கப்பட வேண்டும் என்ற நியதிகளுக்குப் புறம்பாக பாடசாலை வகுப்பறையில் மறைந்திருந்த புலிகளின் து;பபாக்கிதாரியால் யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரிவீதியில் இயங்கிவந்த ஈபிஆர்எல்எவ் அலுவலகத்தில் உடற்பயிற்சியில் ஈடுபட்டிருந்த தோழர் றொபேட் மீது துப்பாக்கிப்பிரயோகம் செய்யப்பட்டது.

தோழர் றொபேட் தன் இளமைக் காலத்திலேயே சமூக அக்கறை மிக்கவராகவும், சமூக அநீதிகளுக்கு எதிரான போக்குடையவராகவும், முற்போக்கு சிந்தனை கொண்டவராகவும் விளங்கினார். மனித சமுதாயத்தின் மீதும், அடக்கி ஒடுக்கப்பட்டிருந்த அடிநிலை மக்கள் மீதும் அவர்களது துயரங்கள் மீதும் கரிசனை கொண்டிருந்தார். சமூக அநீதிகளை மாய்க்க வேண்டும், பெண் விடுதலை வேண்டும் என்ற பாரதியின் புரட்சிகரக் கருத்துக்கள் அவரை ஈர்த்திருந்தது. தந்தை பெரியாரின் பகுத்தறிவுக் கருத்துக்கள் மீது நம்பிக்கை கொண்டிருந்தார். அவரது இந்த கரிசனைகள் தான் எண்பதின் ஆரம்பத்திலேயே ஈழமாணவர் பொதுமன்றம் ஊடாக அவர் ஈபிஆர்எல்எவ் இயக்கத்திற்குள் கால்பதிக்க காரணமாய் அமைந்தது.

அவரது கருத்தியல் ரீதியான தெளிவும், செயற்திறனும் ஈபிஆர்எல்எவ் இன் தலைமை ஸ்தானங்களுக்குத் தெரிவு செய்யப்படுவதற்கு அனுகூலமாயிருந்தது. அவரிடம் காணப்பட்ட தலைமைத்துவப் பண்புகள், ஆளுமைகள் பல. அத்தகைய பண்புகள் அனைத்தும் ஒருவரிடமே இருப்பதை காண்பது அரிது. எந்த ஒரு கட்சி வேலையையும் பொறுப்பேற்றுச் செய்வதற்கு அவர் ஒருபோதும் தயக்கம் காட்டியதில்லை. கட்சிப் பணியின் போது எதிர்கொள்ள நேர்ந்த எந்த ஒரு சவாலையும் அவர் எதிர்கொள்ளத் தயாராயிருந்தார். கஷ்டமான சூழ்;நிலைகளில் பணிபுரிவதை அவர் ஒரு போதும் தட்டிக்களிப்பதில்லை. கடினமான பணிகளை பிறரிடம் சுமத்திவிட்டு லேசானவற்றை தான் செய்ய வேணடும் என்ற நாட்டம் அவரிடம் காணப்படுவதில்லை. எத்தகைய நெருக்கடியான சூழ்நிலையிலும் அவரிடம் பதட்டமோ, நிதானமின்மையோ காணப்படாது. எந்த ஓரு திட்டத்தையும் நிறைவேற்றுவதற்கு பொருத்தமான நபர்களை தேர்ந்தெடுப்பது பிரதானமானதாகும். இந்த விடயத்தில் அவர் கைதேர்ந்த ஒருவராக விளங்கினார். அவர் வாய்வீச்சுக்காரர்களிடம் ஏமாந்ததில்லை. உரையாடும் விடயங்களிலிருந்தே ஒருவரை எடைபோடும் வல்லமை அவருக்கிருந்தது. சக தோழர்களின் தேவைகள் பிரச்சினைகளை தெரிந்துகொண்டு அவற்றுக்கு தீர்வுகாண்பதற்கான நடவடிக்கைகளை காலா காலத்தில் மேற்கொண்டு வந்தார். இலங்கை தமிழர் அரசியல் கட்சிகள் மத்தியிலும், ஆயுதப் போராட்ட இயக்ககங்கள் மத்தியிலும் காணப்பட்ட இனவாதம், பிரதேசவாதம், மூட நம்பிக்கைகள் என்பவற்றுக்கு அவர் ஒரு போதும் ஆட்பட்டதில்லை. இந்த குணாம்சங்களே அவரை சிறந்த தலைவராக மிளிரவைத்தது.

1985 ஆம் ஆண்டு மார்ச் 18ம் திகதி யாழ்ப்பாணம் குருநகரில் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு 1987 யுலை 29 இல் இந்திய இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்தாகி அதன் அடி;ப்படையில் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சகல இயக்கங்களையும் சேர்ந்த இளைஞர்களுக்கும் பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்யப்படும் வரை சிறைவாசம், சித்திரவதைகளை அனுபவித்தவர். 1989 நடுப்பகுதியில் உசன் என்ற இடத்தில் நடைபெற்ற புலிகளுடனான நேரடி மோதலில் தோழர் றொபேட் கழுத்தில் பலத்த காயத்திற்குள்ளானார். அவரது தந்தையார் ஓய்வு பெற்ற பொலிஸ் உத்தியோகத்தர், 1989 இறுதிப் பகுதியில் அவர் புலிகளால் கடத்திச் செல்லப்பட்டு காணாமற் போனார். அவர் எந்தக் குற்றமும் இழைக்காததால் அவரது கடத்தலை உரிமைகோர கூட புலிகளுக்கு முடியவில்லை.

1990 முற்பகுதியில் இந்திய இராணுவம் வெளியேறிய பின் ஈபிஆர்எல்எவ் உறுப்பினர்கள், ஆதரவாளர்களது குடும்பங்களை சேர்ந்தவர்களை புலிகள் பலவந்தமாக பிடித்து படகுகளில் ஏற்றி தமிழ் நாட்டிற்கு நாடுகடத்தினார்கள். இதில் தோழர் றொபேட்டின் தாயாரும் ஒருவர்.

இவை எதுவும் தோழர் றொபேட்டின் அரசியல் பயணத்தில் தடையையோ, தளம்பலையோ ஏற்படுத்திவிடவில்லை.
பல ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ஈபிஆர்எல்எவ் இன் தலைமையின் கீழ் ஆயுதப் போராட்டத்தில் இணைத்துக்கொண்டோம். தமிழ் மக்களின் சுபிட்சமான அரசியல் எதிர்காலத்திற்காக அவர்களில் பலர் தமது உயிர்களை அர்ப்பணித்திருக்கிறார்கள். அவர்களின் நம்பிக்கைகள் வீணாகிவிடக்கூடாது அதற்காக தொடர்ந்து செயற்பட வேண்டும் என்பதே அவரது இலட்சியமாயிருந்தது.

1998 இல் நடைபெற்ற உள்ளுராட்சி மன்ற தேர்தலின் பின் யாழ் மாநகர சபை உறுப்பினராக 4 மேயர்களுடன் அவர் பணியாற்றியிருக்கிறார். இவர்களில் சரோஜினி யோகேஸ்வரன், பொ.சிவபாலன் ஆகிய இருவரும், மேயர்களாகப் பதவி வகித்த காலத்திலேயே புலிகளின் தாக்குதலில் பலியாகினர். இவர்களுக்குப் பின் மேயர்களாகப் பதவி வகித்த நடராஜா ரவிராஜ், செல்லன் கந்தையன் ஆகிய இருவருடனும் மாநகரசபையின் பணிகளில் மிக நெருக்கமாயிருந்து செயற்பட்டவர் சுபத்திரன். யாழ் மாவட்டத்தில் யாழ் மாநகர சபை உட்பட உள்ளுராட்சி மன்றங்களில் தமிழ் அரசியல் கட்சிகளின் தலைமைத்துவத்தை இல்லாதொழிப்பதற்கும் புலிகள் பல்வேறு வழிகளிலும் முயற்சித்த போதும் மாநகர சபை மேயர்களோடும், சக மாநகரசபை உறுப்பினர்களோடும் மாநகரசபையின் ஆளுந் தரப்புக்கு பக்கபலமாயிருந்து சபை சிறப்பாகச் செயற்பட பங்களித்தார் என்பதை சக மாநகரசபை உறுப்பினர்களும், மாநகரசபை உயர் அதிகாரிகள், ஊழியர்கள், பத்திரிகையாளர்கள் என பலரும், பல்வேறு சந்தர்ப்பங்களில் குறிப்பிட்டுக் கூறியுள்ளனர். தமிழ் பத்திரிகைகள் குறித்து அவருக்கு கடுமையான விமர்சனங்கள் இருந்தபோதும் ஊடகவியலாளர்களுடன் பரந்தளவில் நட்பு பூண்டிருந்தார்.
தோழர் றொபேட் சக விடுதலை இயக்கங்களுடன், கட்சிகளுடன் எப்போதும் நல்லுறவை விரும்பியவர். எல்லா இயக்கங்களிலும் அவரை நேசிக்கும், மதிக்கும் நண்பர்கள் பலர் இருந்தார்கள். சக இயக்கங்களை சேர்ந்தவர்களுடன் அவர் கொண்டிருந்த உறவு தேவைக்குப் பயன்படுத்துவதாக, போலியானதாக இருக்கவில்லை. உள்ளார்ந்த அன்பாகவும், உண்மையாகவுமிருந்தது. சக இயக்கங்களின், கட்சிகளின் பங்களிப்புகளுக்கு மதிப்பளிப்பதிலிருந்து உதயமானதால் உன்னதமானதாயிருந்தது.

அவர் வெலிக்கடை சிறையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த காலத்தில் புலிகள் இயக்க இளைஞர்கள் உட்பட சகல இயக்கங்களினதும் இளைஞர்களின் விடுதலைக்காகவும், கைதிகளின் சேம நலன்களுக்காகவும் அனைவருடனும் இணைந்தும், தலைமை ஏற்றும் செயற்பட்டார் அவருடன் சிறைச்சாலையிலிருந்த பலர் இதனை நினைவு கூர்ந்துள்ளனர். இலங்கை அரசின் பிடியிலிருந்து விடுதலையான இளைஞர்கள் புலிகள் இதர இயக்கங்களை தடை செய்ய நடத்திய தாக்குதல்கள் காரணமாக தமது சொந்த இடங்களுக்கு செல்ல முடியாமல் மருதானை கப்பிதாவத்தை பிள்ளையார் கோவில் மண்டபத்திலேயே தங்கியிருந்தனர். பலர் கொழும்பில் நடமாடுவதற்கே அஞ்சினர். குமார் பொன்னம்பலம், ஜோய் அக்கா என அழைக்கப்பட்ட ஜோய் ஜெயரட்ணம் ஆகியோரே சட்டத்தரணிகள் என்ற வகையில் இந்த இளைஞர்களுக்கு அனுசரணையாக செயற்பட்டனர். இந்த இளைஞர்களின் உணவு தேவையை பூர்த்தி செய்வதற்கு சில வாத்தகர்களது உதவியை பெற்றுக்கொடுத்துமிருந்தனர். சிறை மீண்ட இளைஞர்கள் தமது அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதில் சிரமங்களை எதிர்நோக்கியிருந்தனர். இந்த இளைஞர்களில் பலரது தேவைகளை பூர்த்தி செய்வதற்காகவும் அவர்கள் விரும்பிய இடங்களுக்கு அவர்களை அனுப்பி வைப்பதற்காகவும் தோழர் றொபேட் மிகுந்த பிரயத்தனம் எடுத்துக்கொண்டார்.

குடும்பத்தில் செல்லப் பிள்ளையாக இருந்த அவர் வாழ வழியற்ற வறிய மக்களின் கஷ்டங்கள் பற்றிச் சிந்தித்தார். இந்தத் துயரிலிருந்து அவர்களை விடுவிக்கப் பாடுபட முன்வந்தார். குடும்பம், உறவினர்கள், நண்பர்கள் என பலர் அவருக்கும் அவருக்கூடாக கட்சிக்கும் உதவியிருக்கிறார்கள். கட்சி பெறுமதி மிக்க பல அசையும் அசையா சொத்துக்களுக்கு உரிமை பாராட்ட காரணமாக இருந்து சுமார் 20 வருடங்கள் கட்சி அமைப்புக்களில் தலைமை ஸ்தானத்திலிருந்து உழைத்த அவர் உயிhதுறக்கும் போது தனக்கென்று எதையும் சேமித்து வைக்கவில்லை. மாநகரசபை உறுப்பினர் என்ற வகையில் அவருக்கு ஊதியமாக வழங்கப்படும் காசோலைகளை கூட கட்சி செலவுகளுக்காகவே அவர் வழங்கிவந்தார். அரசியல் நேர்மையோடும், பொது வாழ்வில் தூய்மையோடும் கறை படியாத கரங்களோடுமே அவர் மரணித்தார்.

தோழர் றொபேட் பொது வாழ்க்கையில், சமூகப்பணியில் ஈடுபடுபவர்களுக்கு ஒரு முன்னுதாரண புருஷர். அவரது சொல்லுக்கும் செயலுக்கும் இடையில் பேதம் இருக்கவில்லை. அவர் தனது செய்கைகளால் எம்மை வழிநடத்தினார்.சுமார் 25 ஆண்டுகள் பொதுவாழ்வில் ஈடுபட்டு தமிழ் பேசும் மக்களின் விடிவிற்கான போராட்டத்தில பங்கெடுத்திருந்தார். ஈபிஆர்எல்எவ் இன் உருவாக்கத்திலும் வளர்ச்சியிலும் அவரது பங்கு மகத்தானது. தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளுக்காகவும், தமிழ் சமூகத்தில் நிலவிய பாரபட்சங்கள், அநீதிகளுக்கு எதிராகவும், தமிழ் மக்கள் மத்தியில் ஜனநாயக மீட்சிக்காகவும், மக்கள் நலநன முன்னிலைப்படுத்தும் உயரிய அரசியல் பண்பாட்டிற்காகவும் தன்னை அர்ப்பணித்து உழைத்த போராளி அவர்.

அவரது இழப்பு மக்களுக்கும், கட்சிக்கும் ஈடுசெய்யப்பட முடியாத இழப்பாகும். அவர் தன்னை அர்ப்பணித்து உழைத்த, மக்களின் விடுதலைக்காகவும், சமூக அநீதிகளுக்கு எதிராகவும் அவரது பாதையில் தொடர்ந்தும் போராட உறுதியேற்று அவரது நினைவு நாளில் அன்னாருக்கு அஞ்சலி செலுத்துவோம்.

(தோழர் றொபேட் (தம்பிராசா சுபத்திரன்) அவர்களின் 13 ஆவது ஆண்டு நினைவு தினம் இன்றாகும், (14.06.2003) அவரது நினைவு தினத்தையொட்டி கடந்த வருடம் எழுதப்பட்ட இக்கட்டுரை மீள்பிரசுரம் செய்யப்படுகிறது.)