சாதித்துக்காட்டிய சந்திரயான் 3

சோவியத் ஒன்றியம்/ ரஷ்யா, அமெரிக்கா,  சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக இந்தியா நிலவில் கால் பதித்துள்ளது. சந்திரயான் 3 தரையிறங்கிக் கலம் கீழே இறங்கும் நிகழ்வு தொடங்கி சுமார் பதினேழு நிமிடங்கள் கடந்திருந்தன.

அப்போது நிலவின் தரையிலிருந்து வெறும் 150 மீட்டர் உயரத்தில் இருந்தபோது, கீழே இடர்நிலை உள்ளது என்பதைத் தரையிறங்குக் கலம் கவனித்தது. அந்த நேரம் அனைவருக்கும் ‘திக் திக்’ நிமிடங்களாகக் கடந்தது. அந்நிலையில். அதன் இடரை உணர்ந்து ஆபத்தைத் தவிர்க்கும் செயற்கை நுண்ணறிவு மென்பொருள் சட்டென்று செயல்பட்டு. அருகே பாதுகாப்பான இடத்தை அடையாளம் கண்டது. அதனால் தரையிறங்குக் கலம் பக்கவாட்டில் நகர்ந்து பாதுகாப்பாக அங்கே தரையிறங்கியது.

அடுத்து என்ன? – நிலவின் தென் துருவப் பகுதியில் சூரிய ஒளி தெரியும் பகல் பொழுதில். வெப்பம் சுமார் 54 டிகிரி இருக்கும். சூரியன் மறைந்து இரவு கவிழும்போது வெப்பம் தடாலெனக் குறைந்து மைனஸ் 200 என்ற உறைபனிக் குளிர் ஏற்படும்.

சந்திரயான் கலங்களில் உள்ள மின்னணுக் கருவிகள் அந்தக் கடும் குளிரைத் தாங்காது. எனவே. நிலவின் பகல் பொழுதில் மட்டுமே கருவிகள் செயல்படும். அதன் பின்னர் தரையிறங்கிக் கலம். உலாவிக் கலம் ஆகியவற்றின் ஆயுள் முடிந்துவிடும். நிலவின் ஒரு நாள் என்பது 14 பூமி நாள்களுக்குச் சமம். எனவே. தரையிறங்கிக் கலம். உலாவிக் கலத்தின் ஆயுள் 14 நாள்கள்.

தரையிறங்கும் தொழில்நுட்பம்: விமான இறக்கை, ஹெலிகாப்டர் விசிறி, பாராசூட் முதலியவற்றைப் பயன்படுத்தி பூமியில் மென்மையாகத் தரையிறங்க முடியும். காற்றே இல்லாத நிலவில் இந்த மூன்றும் பயன் தராது. எனவேதான் ஆற்றலளித்துத் தரையிறக்கும் (powered descent) நுட்பத்தை நிலவில் பயன்படுத்த வேண்டும். ராக்கெட் உயர் அழுத்தப் புகை வெளிப்படும் திசைக்கு எதிராகத் தள்ளு விசை ஏற்படும்.

எனவே, கீழே விழும் விண்கலம் கீழ்நோக்கி ராக்கெட்டை இயக்கினால் மேல் நோக்கிய தள்ளுவிசை கிடைக்கும். கீழ்நோக்கிய ஈர்ப்புவிசை, மேல்நோக்கிய ராக்கெட் தள்ளுவிசை இரண்டின் விளைவாக விண்கலத்தை அந்தரத்தில் நிறுத்தலாம்; அல்லது மெதுவாகக் கீழே இறங்கச் செய்யலாம். இதுவே ஆற்றலளித்துத் தரையிறக்கும் நுட்பம்.

கீழ்நோக்கிய விசைக்கு ஈடுகட்டும் வகையில் மேல்நோக்கிய தள்ளுவிசையை உருவாக்க வேண்டும். அதற்கு ராக்கெட் இன்ஜின் செயல்பாட்டைக் கூட்டிக் குறைக்க வேண்டும். இதற்கான செயற்கை நுண்ணறிவுப் பொறியைத் தயார் செய்ய வேண்டும். இதுபோல வழித்தடம் காணும் செயற்கை நுண்ணறிவுப் பொறி, இடர் உணர்ந்து ஆபத்தைத் தவிர்க்கும் செயற்கை நுண்ணறிவுப் பொறி, விண்கலத்தை இயக்குவதற்கு செலுத்திப் பொறி முதலியவற்றை இந்திய விஞ்ஞானிகள் தயார் செய்துள்ளனர். இந்த செயற்கை நுண்ணறிவுப் பொறிகள் சிறப்பாகச் செயல்படுகின்றன என சந்திரயான் 3 வெற்றி நமக்கு எடுத்துக்காட்டுகிறது.

என்னென்ன ஆய்வுகள்? – 2019 ஆகஸ்ட் 20 அன்று நிலவின் சுற்றுப்பாதையை அடைந்த சந்திரயான் 2 இன்றும் சிறப்பாகச் செயல்பட்டுவருகிறது. இதன் சுற்றுப்பாதைக் கலத்தில் பொருத்தப்பட்டிருந்த தொலையுணர்வுக் கருவியைக் கொண்டு நிலவின் தரைப்பரப்பில் உள்ள தாதுப்பொருள்கள் இனம்காணப்பட்டுப் பட்டியலிடப்பட்டுள்ளன.

ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதுபோலத் தொலையுணர்வு வழியே அறியப்பட்ட தரவுகள் உண்மைதானா என உலாவிக் கலத்தில் பொருத்தப்பட்டுள்ள ஆல்பா துகள் எக்ஸ்ரே நிறமாலைமானி (Alpha Particle X-ray Spectrometer – APXS), லேசர் தூண்டுதலுடன் சிதைக்கும் நிறமாலை மானி (Laser Induced Breakdown Spectroscope – LIBS) கருவிகளைக் கொண்டு ஆய்வுசெய்யும்.

தொலையுணர்வு வழியே இனம் கண்ட அதே தாதுப் பொருள்களை உலாவிக் கலமும் இனம் கண்டால், சுற்றுப்பாதைக் கலம் அளிக்கும் தரவுகள் மீது கூடுதல் உறுதித்தன்மை ஏற்படும். இதுதான் முக்கியத் திட்டம். உலாவிக் கலம் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று தரவுகளைத் திரட்ட முடியும் என்பதால், மேலும் நம்பிக்கை தரும்.

பூமியின் மேற்புற ஓடு சில்லு சில்லாக உடைந்து ஒன்றுடன் ஒன்று மோதியபடியே உள்ளது. ‘டெக்டானிக் சில்லுகள்’ எனப்படும் இந்தப் பகுதிகள் மோதி உரசும் இடங்களில்தான் நிலநடுக்கம், எரிமலை போன்றவை பூமியில் உருவாகும்.

உலரும் திராட்சைப் பழத்தோலின் மீது சுருக்கம் ஏற்படுவதுபோல, நிலவு குளிரக் குளிர அதன் மேற்புறத்திலும் சுருக்கம் ஏற்படுகிறது. இந்த நிகழ்வின் தொடர்ச்சியாக நிலவிலும் நிலநடுக்கம் ஏற்படுகிறது. நிலவின் நடுக்கங்களை உணர்ந்து ஆராய்ச்சி செய்ய தரையிறங்கிக் கலத்தில் நிலவு நடுக்க ஆய்வுக் கருவி (Instrument for Lunar Seismic Activity – ILSA) பொருத்தப்பட்டுள்ளது.

உலோகம் வெப்பத்தைக் கடத்தும் அதே வகையில் மரத்துண்டு கடத்தாது; அதனால்தான் மரத்துண்டைக் கொண்டு சமையல் கரண்டி கைப்பிடியைச் செய்கிறோம். சந்திரா தரைப்பரப்பு வெப்ப இயற்பியல் ஆய்வு (Chandra’s Surface Thermo-physical Experiment – ChaSTE) எனும் ஆய்வுக் கருவியை வைத்து, நிலவு மண்ணின் வெப்பக் கடத்துத் திறன் அளவிடப்படும்.

பூமியின் மீது திட, திரவ, வாயு என்ற மூன்று நிலைகளில் பொருள்கள் உள்ளன. மின்னல் போன்ற அரிதான வகைகளில் மட்டுமே நான்காவது நிலையான பிளாஸ்மா நிலையில் பொருள்களைப் பூமியில் காணலாம். ஆனால், சூரியக் கதிர்களின் தாக்கத்தில் நிலவின் மேற்புறத்தில் தோல்போல பிளாஸ்மா அடுக்கு உள்ளது. நிலவின் தரைப்பரப்பின் அருகே பிளாஸ்மா நிலையில் உள்ள பொருள்களை ‘ரம்பா’ கருவி (Radio Anatomy of Moon Bound Hypersensitive ionosphere and Atmosphere – RAMBHA) ஆராயும்.

மேலும் பூமியிலிருந்து அனுப்பப்படும் லேசர் கதிர்களைத் தரையிறங்கிக் கலத்தில் பொருத்தப்பட்டுள்ள லேசர் பிரதிபலிப்புக் கண்ணாடி (Laser Retroreflector Array – LRA) பிரதிபலித்துத் திருப்பும். லேசர் ஒளி சென்றுவர எடுக்கும் காலம் அளக்கப்பட்டு, நிலவின் தொலைவு மிகத் துல்லியமாக ஆய்வு செய்யப்படும்.

நிலவின் இயக்கங்கள், ஈர்ப்பு விசைகுறித்த தத்துவ ஆய்வுகள் எனப் பல மேலதிக ஆய்வுகள் இந்தத் தரவுகளைக் கொண்டு மேற்கொள்ளப்படும். ஒட்டுமொத்தமாக விண்வெளி சார்ந்த ஆய்வில் இந்தியா அடுத்த கட்டப் பாய்ச்சலுக்குத் தயாராகிவிட்டதை, சந்திரயான் 3 வெற்றி உறுதிப்படுத்தியிருக்கிறது.

வெற்றியின் முதல் படி:

பூமியிலிருந்து நிலவு வரை சந்திரயான்-3 கடந்து வந்த பாதை!

இந்தியா உட்பட உலகமே எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்த சந்திரயான்-3 விண்கலம், கடந்த ஜூலை 14ம் திகதி நிலவில் ஆய்வு மேற்கொள்வதற்காக, ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2வது ஏவு தளத்திலிருந்து, 4 ராக்கெட் மூலம் சந்திரயான்–3 விண்கலம் சரியாக 2:35 மணிக்கு விண்ணில் வெற் LVM3 M றிகரமாக செலுத்தப்பட்டது.

பூமியிலிருந்து நிலவுக்கு உயர்த்தும் நிகழ்வு:

முதற்கட்ட கட்ட நிகழ்வு

ஜூலை 15ம் திகதி முதற்கட்ட சுற்றுப்பாதை உயர்த்தும் (Earthbound firing-1) சுழற்சி முறை வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டது. அப்போது, விண்கலம் 41762  கி​லோ மீட்டர் x 173 கி​லோ மீட்டர் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது.

இரண்டாம் கட்ட நிகழ்வு

ஜூலை 17ம் திகதி இரண்டாம் கட்ட சுற்றுப்பாதை உயர்த்தும் (Earth-bound apogee firing) சுழற்சி முறை வெற்றிகரமாக செய்யப்பட்டது. அப்போது, விண்கலம் 41603 கி​லோ மீட்டர் x 226 கி​லோ மீட்டர் சுற்றுப்பாதையில் கொண்டுவரப்பட்டது.

மூன்றாம் கட்ட நிகழ்வு

ஜூலை 18ம் திகதி மூன்றாம் கட்ட சுற்றுப்பாதை உயர்த்தும் (பூமிக்கு செல்லும் பெரிஜி துப்பாக்கி சூடு) சுழற்சி முறை வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டது. விண்கலம் 51400 கி​லோ மீட்டர் x 228 கி​லோ மீட்டர் சுற்றுப்பாதையை அடைந்தது.

நான்காம் கட்ட நிகழ்வு

ஜூலை 20ம் திகதி நான்காம் கட்ட சுற்றுப்பாதை உயர்த்தும் (Earth-bound perigee firing) சுழ்ற்சி வெற்றிகரமாக முடிந்தது. அப்போது, விண்கலம் 71351 கி​லோ மீட்டர் x 233 கி​லோ மீட்டர் சுற்றுப்பாதையில் நிறுவப்பட்டது.

ஐந்தாம் கட்ட நிகழ்வு

இதனையடுத்து ஜூலை 25ம் திகதி ஐந்தாம் கட்ட மற்றும் இறுதி கட்ட சுற்றுப்பாதை உயர்த்தும் (Earth-bound perigee firing) சுழற்சி முறை வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டது. அப்போது, விண்கலம் 127603 கி​லோ மீட்டர் x 236 கி​லோ மீட்டர் சுற்றுப்பாதையை அடைந்தது. இதனை தொடர்ந்து, சந்திராயன்-3 விண்கலமானது பூமியை சுற்றி தனது சுற்றுப்பாதையை நிறைவு செய்து நிலவை நோக்கிய தனது பயணத்தைத் தொடங்கியது.

நிலவை நோக்கி பயணம்:

ஆகஸ்ட் 1ம் திகதி டிரான்ஸ் லூனார் இன்செர்ஷன் (டிஎல்ஐ) சுழற்சி மூலம் சந்திரயான்-3 பூமியின் சுற்றுப்பாதையில் இருந்து புறப்பட்டு நிலவை நோக்கி பயணிக்க தொடங்கியது. அன்றைய தினம், பூமியிலிருந்து நிலவுக்கு 288     கி​லோ மீட்டர் x 369328 கி​லோ மீட்டர் ஆக இருந்தது. ஓகஸ்ட் 4ம் திகதி விண்கலம் நிலவின் மூன்றில் இரண்டு பங்கு தூரத்தை கடந்தது.

பின்னர், ஓகஸ்ட் 5ம் திகதி லூனார் ஆர்பிட் இன்ஜெக்ஷன் (LOI) அதாவது, சந்திரயான்-3 விண்கலமானது பெரிலூனில் ஒரு ரெட்ரோ எரிப்பு மூலம் நிலவின் சுற்றுப்பாதைக்குள் வெற்றிகரமாக நுழைந்தது.  இதன் பிறகு, சந்திரயான்-3 விண்கலத்தின் சுற்றுவட்ட பாதை குறைப்பு நிகழ்வு நடைபெற்றது.

சுற்றுப்பாதை குறைப்பு:

முதற்கட்ட குறைப்பு

அதன்படி, கடந்த ஆகஸ்ட் 6ம் திகதி சந்திரயான்-3 விண்கலத்தின் திட்டமிட்ட முதற்கட்ட சுற்றுப்பாதை குறைப்பு வெற்றிகரமாக மேற்கொண்டது. என்ஜின்களின் சுழற்சி சந்திரனின் மேற்பரப்புக்கு நெருக்கமாக கொண்டு வந்து, 170 கி​லோ மீட்டர் x 4313 கி​லோ மீட்டர். தொலைவில் கொண்டு வரப்பட்டது.

இரண்டாம் கட்ட குறைப்பு

ஆகஸ்ட் 9 ஆம் திகதி சந்திரயான்-3 விண்கலத்தின் திட்டமிட்ட இரண்டாம் கட்ட சுற்றுப்பாதையின் குறைப்பு வெற்றிகரமாக நிகழ்த்தியது. அதன், என்ஜின்களின் சுழற்சி சந்திரனின் மேற்பரப்புக்கு நெருக்கமாக கொண்டு வந்து, 174 கி​லோ மீட்டர் x 1437 கி​லோ மீட்டர். கொண்டு வரப்பட்டது.

மூன்றாம் கட்ட குறைப்பு

அதன் பிறகு கடந்த ஆகஸ்ட் 14 ஆம் திகதி மூன்றாம் கட்ட சுற்றுப்பாதையின் குறைப்பு 150 கி​லோ மீட்டர் x 177 கி​லோ மீட்டர் சுற்றுவட்டப் பாதையை அடைந்தது.

இறுதிகட்ட குறைப்பு

ஆகஸ்ட் 16 ஆம் திகதி, சந்திரயான் -3ஐ 153 கி​லோ மீட்டர் x 163             கி​லோ மீட்டர் என்ற சுற்றுவட்டப்பாதையில் கொண்டு செல்லப்பட்டது. இத்துடன், சந்திரனைக் சுற்றிவரும் சுற்றுவட்ட பாதைகள் நிறைவடைகின்றன. இதுவே உந்துவிசைக் கலனின் உதவியுடன் ‘விக்ரம்’ லேண்டர் மேற்கொண்ட கடைசி கட்ட சுற்றுவட்ட பாதையாகும்.

தற்போதைய நிகழ்வு:

உந்துவிசைக் கலனில் இருந்து, தனியாக பிரிக்கப்பட்ட விக்ரம் லேண்டர், நிலவை சுற்றிவந்த போது,லேண்டரின் சுற்றுப்பாதை முதல் மற்றும் டீபூஸ்டிங் முறை மூலம் 25 கிலோ மீட்டர் x 134 கிலோ மீட்டருக்கு வெற்றிகரமாக குறைக்கப்பட்டு தற்போது, சந்திரயான்-3 விண்கலம், திட்டமிட்டபடி நிலவில் தரையிறங்கியதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

கடந்த ஜூலை 14-ம் திகதி, ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஜிஎஸ்எல்வி LVM3 M4 ராக்கெட் மூலம் விண்ணில் பாய்ந்தது. விண்ணில் பாய்ந்த சந்திரயான்-3 விண்கலம், பல்வேறு கட்டங்களாக நிலவை சுற்றி வந்தநிலையில், நிலவின் தரையில் வெற்றிகரமாக கால் பதித்து வரலாற்று சாதனையை படைத்துள்ளது.

(Tamil Mirror)