அமெரிக்காவின் அழுத்தத்தை நம்பியிருக்கும் முதலமைச்சர் விக்னேஸ்வரன்

ஜெனீவா தீர்மானங்களை இலங்கை அரசாங்கம் நடைமுறைப்படுத்துவதற்கான அழுத்தங்களை, சர்வதேச அரசாங்கங்கள் வழங்க வேண்டுமென, ஐக்கிய அமெரிக்காவின் பிரதிநிதிகள் சபையின் உறுப்பினரான பில் ஜோன்சனிடம் வலியுறுத்தியுள்ளதாக, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

பில் ஜோன்சன், ஐ.அமெரிக்காவின் இலங்கைக்கான தூதுவர் அதுல் கெஷாப் ஆகியோர், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை, அவரது உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இன்று (14) சந்தித்துக் கலந்துரையாடினர். கலந்துரையாடலின் பின் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போதே, முதலமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“அரசியல் ரீதியான பயணம் எப்படி இருக்கின்றது என கேள்வி எழுப்பியிருந்தார். 2015 ஜனவரி மாதம் 8ஆம் திகதி நாம் எதிர்பார்த்தமைக்கு மாறாக, இன்னும் இரண்டு வருடம் தாமதமாக இருப்பதனால், மக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

“பல இடங்களில் எமது மக்கள், போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். துணிவான சில நடவடிக்கைகளை எடுக்காமையினால், அரசியல் காரணங்களுக்காக நாம் எடுக்க வேண்டிய எமது நடவடிக்கைகளையும் முக்கியமான செயற்பாடுகளையும் எடுக்காமல் இருப்பது, மக்களிடையே ஒரு விதமான விசன நிலையை ஏற்படுத்தும்.

“இதுவரையில் மக்களின் காணிகளைத் திருப்பிக் கொடுக்காமை, மீண்டும் மக்களின் காணிகளை சுவீகரிப்பதற்கான நடவடிக்கைகள், வேலைவாய்ப்பு, காணாமல் போனோர் பிரச்சினைகள், மக்களின் காணிகளை இராணுவத்தினர் வைத்திருப்பது போன்ற பல விடயங்கள் பற்றிக் கலந்துரையாடினோம்.

“நடைபெற்று முடிந்த ஜெனீவா கூட்டத்தின் போது, மேலும் 2 வருட காலம், இலங்கைக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. இலங்கை அரசாங்கமும் இணைந்து, தீர்மானத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள விடயங்களை நடைமுறைப்படுத்துவோம் என வாக்குறுதி அளித்துள்ளனர்.

“அரசாங்கம் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு ஏற்ற அழுத்தங்களைக் கொடுக்க வேண்டும். என்ன விடயங்கள் நடைபெறுகின்றன, எப்போது நடைபெறுகின்றது, என்ன விடயங்கள் நடைபெறவில்லை, குறிப்பிட்ட காலப்பகுதியில் நிறைவேற்ற முடியுமா, 2 வருட காலத்தில் கூட எடுத்துக்கொண்ட விடயங்களை நடைமுறைப்படுத்த முடியுமா என, இப்போதே கேட்க வேண்டும்.

“அத்துடன், இலங்கை அரசாங்கம் உலக நாடுகளுக்கு வழங்கிய உத்தரவாதத்தை, எப்படியாவது நடைமுறைப்படுத்த வேண்டுமென்றும், அவற்றை நடைமுறைப்படுத்தவதற்கு அமெரிக்காவின் ஒத்தாசை அவசியமென்பதனையும் வலியுறுத்தினேன்” என, முதலமைச்சர் மேலும் தெரிவித்தார்.