இலண்டனில் தாக்குதல்கள்: 6 பேர் பலி ; 30 பேர் காயம்

ஐக்கிய இராச்சியத்தின் தலைநகரான இலண்டனின் மத்திய பகுதியில் மேற்கொள்ளப்பட்ட 2 தாக்குதல்களில், 6 பேர் கொல்லப்பட்டதோடு, 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். தவிர, தாக்குதல்களை மேற்கொண்ட 3 பேரும் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதல்கள், இலங்கை நேரப்படி இன்று அதிகாலை 2:38 மணிக்கு (ஐ.இராச்சிய நேரப்படி நேற்று முன்தினம் இரவு 10:08) ஆரம்பித்துள்ளன.

இலண்டன் பாலத்தில் வைத்து, மக்களை நோக்கி, வாகனத்தால் இடித்துத் தள்ளி, அவர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்திய இவர்கள், அதன் பின்னர் வானிலிலிருந்து வெளியேறி, பரோ சந்தைப் பகுதியில் வைத்து, கத்தியால் குத்தியுள்ளனர்.

அதைத் தொடர்ந்து பொலிஸார் மேற்கொண்ட எதிர் நடவடிக்கையின் போது, பரோ சந்தைப் பகுதியில் வைத்து அவர்கள் கொல்லப்பட்டனர்.

இந்தத் தாக்குதல்களை, பயங்கரவாதமாகக் கருதி, விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக, பொலிஸார் அறிவிக்கின்றனர்.

இதேவேளை, இலண்டனின் தென்மேற்குப் பகுதியிலுள்ள வொக்வோல் பகுதியிலும், கத்திக்குத்துச் சம்பவமொன்று இடம்பெற்றதாக அறிவிக்கப்படுகிறது. எனினும் இந்தத் தாக்குதல், ஏனைய இரண்டு தாக்குதல்களோடு தொடர்புடையது அல்ல என, பொலிஸார் அறிவிக்கின்றனர்.