இலத்திரனியல் தராசு எமக்கு வேண்டாம்… செப்பல்டன் தோட்ட மக்கள் சீற்றம்

தாம் பறிக்கும் கொழுந்து நிர்வாகத்தால், இலத்திரனியல் தராசு மூலம் நிறை பார்க்கும் போது, குறைவாக இருப்பதாகவும் சாதாரண தராசில் நிறை பார்க்கும் போது உரிய நிறையுடன் இருப்பதாகவும் செப்பல்டன் தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

தோட்ட நிர்வாகத்தால் திட்டமிட்ட முறையிலேயே இந்த மோடி நடைபெறுவதாகவும் இந்த நடவடிக்கையை தொடர்ந்து அனுமதிக்க முடியாதென தொழிலாளர்கள் எச்சரித்துள்ளனர்.

இந்த நிலையில் குறித்த தோட்டத் தொழிலாளர்கள் ஹட்டனிலுள்ள தொழில் ஆணைக்குழு அதிகாரிகளிடம் முன்வைத்த முறைப்பாட்டுக்கு அமைய, குறித்த அதிகாரிகள் தோட்ட நிர்வாகத்துடனும் தொழிலாளர்களுடனும் கலந்துரையாடல்களை முன்னெடுத்துள்ளனர்.

இதன்போது இலத்திரனியல் தராசில் தாம் பறிக்கும் கொழுந்துகளை நிறை பார்ப்பதற்கு ஒப்படைக்கமாட்டோம் தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், இந்த விடயம் தொடர்பில், செப்பல்டன் தோட்ட அதிகாரியொருவரிடம் வினவியபோது, தொழிலாளர்களின் அடிப்படைச் சம்பளமாக 1,000 ரூபாய் வழங்கப்பட வேண்டும். ஆனால் தோட்டங்கள் நட்டத்தில் செல்கையில் தொழிலாளர்களுக்கான சம்பளத்தை வழங்கும் போது, மேலும் நட்டம் ஏற்படுவதாகவும் தெரிவித்த அவர், இதனை ஈடு செய்யவே தொழிலாளர்களை பச்சைத் தேயிலைக் கொழுந்தை பறிக்கவும் அவற்றை இந்த தராசில் நிறை பார்க்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டதென்றார்.

எனவே தோட்டத் தொழிலாளர்களின் கோரும்  இலத்திரனியல் தராசு பயன்பாட்டை நிறுத்த முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.