கரும்பு உண்டிருக்கும் நாம் காணும் பொங்கலில் ‘காணாது விடுவோம்’

பொங்கல் பண்டிகை நான்கு நாள்கள் கொண்டாடப்படும். ‘பழையன கழித்தல்’ என்பதை அடையாளமாகக் கொண்டு, ‘போகி பண்டிகை’ கொண்டாடப்படுகின்றது. மார்கழி மாதம் முடிந்ததும் தேவையில்லாத பொருட்களை எரித்துவிடுவார்கள்.

அதன்பின்னரே ‘தை’ பிறக்கும், தைப்பிறந்தால் வழிபிறக்கும் என்பர். ஆகையால், தேவையில்லாத பொருட்களை மட்டுமன்றி, கடந்த கால கசப்பான சம்பவங்களையும் மனங்களிலிருந்து தூக்கியெறிந்துவிடவேண்டும். அப்போதுதான் ‘தை’ பிறந்தமை அர்த்தபுஷ்டியாக இருக்கும்.

இன்று தைப்பொங்கல், நாளை மாட்டுப்பொங்கல்; மறுதினம் காணும் பொங்கல், இவற்றில் எல்லாமே மனங்குளிரச் செய்யும் இனிப்புப் பண்டங்கள் நிறைந்திருக்கும். இதில், கரும்பு என்றாலே வித்தியாசமான இனிப்பாய் இருக்கும்.

கரும்பை, நுனியிலிருந்து உண்டு பார்ப்பதைப் போலத்தான், வாழ்க்கையும் அமைந்திருக்கவேண்டுமென பலரும் கூறக்கேள்விப்பட்டிருக்கிறோம். நிச்சயம், ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் மேடுபள்ளங்கள் இருக்கத்தான் செய்கின்றன.

கரும்பின் அடிப்பகுதிதான் இனிப்பாய் இருக்கும். அதேபோல, வாழ்க்கையும் எடுத்த எடுப்பிலேயே இனித்துவிட்டால், கடந்துவந்திருப்பதில் அனுபவங்கள் கிடைத்திருக்காது. ஆகையால், எந்தவொரு துறையிலும் முன்னேற வேண்டுமாயின் முயற்சியே முக்கியமான ஆயுதமாகும். அந்த ஆயுதத்தை இன்றிலிருந்து கையிலெடுத்தால் மட்டுமே வழிபிறக்கும். இல்லையேல் வாழ்க்கைக்கு வலியாக இருக்கும்.

கொரோனா வைரஸின் இரண்டாவது அலை, ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் மாற்றங்களை ஏற்படுத்தச் செய்திருக்கின்றது. அது கரும்பை நுனியிலிருந்து சுவைப்பதை போலவே இருக்கும் என்பதலால், தை பிறந்துவிட்டது என்பதற்காக அசட்டையாக இருந்துவிடக்கூடாது. இதனைதான், வீட்டுக்கு வெளியே பொங்கல் வேண்டாமென சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

முதல் மூன்று பொங்கல்கள் எவ்வாறாக கொண்டாடப்பட்டிருந்தாலும் பரவாயில்லை, நான்காவது பொங்கலான ‘காணும் பொங்கலில்’ மிகக் கவனமாக இருக்கவேண்டும். ஏனெனில், இந்நாளில்தான் தங்களுடைய உற்றார் உறவினரைச் சென்று சந்தித்து, தங்கள் அன்பையும் உணவுப் பண்டங்களையும் பகிர்ந்துகொள்வர்.

இந்தப் பண்டியைக் கொண்டாடும் வழக்கம் எம்மில் பலருக்கும் இன்றும் இருக்கிறது. ஆனால், நெருக்கடியான இந்தக்கால கட்டத்தில், காணும் பொங்கலில் காணாது விடுவதே, (உறவினர்கள், நண்பர்களின் வீடுகளுக்குச் செல்வது) யாவரும் நலன்பயக்கும்.

இன்றைய நாளில்கூட, கோவில்களுக்கு பலரும் செல்வர், கோவிலுக்குள் நுழையும் முன்னரே, கைக்கால்களை கழுவிக்கொண்டு செல்வது இந்துக்களின் வழக்கம். ஆனால், தற்போதைய சுகாதார வழிமுறைகள் சாதாரண கோவில்களில் இல்லை. ஆகையால், பாதுகாப்பாகச் சென்றுவர, வழிபிறக்க வேண்டுமென நாமும் பிரார்த்திக்கின்றோம்.