காணிகள் விடுவிப்புக்கு த.தே.கூ வரவேற்பு

வலிகாம் வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் இராணுவத்தினரின் வசமிருந்த 701 ஏக்கர் காணிகளை அவற்றின் உரிமையாளர்களின் மீள்குடியேற்றத்துக்கென அரசாங்கம் விடுவித்துள்ளமையை வரவேற்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இன்று(31) தெரிவித்துள்ளது. கூட்டமைப்பின் ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டிருந்ததாவது, இரண்டு மாதங்களுக்கு முன்னர் யாழ். குடாநாட்டுக்கு விஜயம் செய்திருந்த எதிர்க்கட்சித் தலைவர், விடுக்கப்படாத காணிகளை நேரில் சென்று பார்வையிட்டிருந்தார். விடுவிக்கப்படக் கூடிய காணிகளை உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என ஜனாதிபதியை நேரில் சந்தித்துக் கோரிக்கை விடுத்திருந்தார்.

அக்கோரிக்கை நிறைவேற்றப்படும் எனவும் இவ்வருட இறுதிக்குள் ஒருபகுதியில் மீள்குடியேற்றத்துக்கென மக்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்ற ஜனாதிபதியின் வாக்குறுதி நிறைவேற்றப்பட்டதையிட்டு, ஜனாதிபதிக்கு எமது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். அதேவேளை, விடுவிக்கப்படாத பகுதிகள் கட்டம் கட்டமாகவேனும் விரைவில் விடுவிக்கப்படவேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். இதைப்போலவே, மலரும் புதிய வருடத்தின் ஆரம்பத்தில், தமிழ் அரசியற் கைதிகளும் விடுவிக்கப்படவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம் என அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.