கேப்பாபுலவில் 394 ஏக்கர் விடுவிக்கப்படும்

முல்லைத்தீவு, கேப்பாபுலவு பகுதியில் 394 ஏக்கர் காணிகளை விடுவிப்பதற்கு அரசாங்கம் உத்தேசித்திருப்பதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துசமய விவகார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், நாடாளுமன்றத்தில் நேற்று(04) தெரிவித்தார். ஈ.பி.டி.பி.யின் யாழ். மாவட்ட எம்.பி.யான டக்ளஸ் தேவானந்தா எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் சுவாமிநாதன் இந்த விடயத்தை குறிப்பிட்டார். கேப்பாபுலவில் தமது காணிகளை விடுவிக்குமாறு மக்கள் நடத்திவரும் தொடர் போராட்டம் தொடர்பாக டக்ளஸ் தேவானந்த இதன்போது கேள்வி எழுப்பினார்.

இதற்குப் பதிலளித்த அமைச்சர் சுவாமிநாதன், “கேப்பாபுலவில் 394 ஏக்கர் காணிகளை விடுவிப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளோம். அங்குள்ள மக்களின் பிரச்சினைகள் பற்றி அறிந்து கொண்டிருப்பதுடன், அவற்றை நிவர்த்தி செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருக்கிறது” என்று தெரிவித்தார்.